Friday, June 5, 2015

கிரிக்கெட் பந்தை 6 மணி நேரம் தொடர்ந்து தட்டி மதுரை மருத்துவ மாணவர் கின்னஸ் சாதனை முயற்சி

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் கெüதம் நாராயணன் வியாழக்கிழமை ஒரே இடத்தில் நின்று கிரிக்கெட் பந்தை மட்டையால் தொடர்ந்து 6 மணி 14 நிமிடம் தட்டி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம், குகை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் கெளதம் நாராயணன். மதுரை மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கிரிக்கெட் மட்டையால், கிரிக்கெட் பந்தை ஒரே இடத்தில் நின்றபடி தட்டி கின்னஸ் சாதனை முயற்சியை வியாழக்கிழமை காலை 11.10-க்குத் தொடங்கினார். அவருக்கு ஒன்றரைக் கிலோ எடையுள்ள கிரிக்கெட் மட்டை, 60 கிராம் எடையுள்ள பந்து அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் சாதனை முயற்சியை தொடக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒரே இடத்தில் நின்றபடி வலது கையில் கிரிக்கெட் மட்டையால் பந்தை தட்டியபடி கெüதம் நாராயணன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். இரண்டு மணி நேரம் தொடர்ந்து தட்டினாலே அவர் சாதனைக்கு தகுதி பெற்றாலும், நீண்ட நேரம் தட்டி சாதிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து செயல்பட்டார்.
தண்ணீர், உணவு எடுத்துக் கொள்ளாமல், மாலை 5 மணி 24 நிமிடத்துக்கு பந்தைத் தட்டுவதை நிறுத்தி சாதனை நிகழ்த்தினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கின்னஸ் அமைப்பு வெளியிடும் என்று சாதனை முயற்சியின் நடுவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024