Wednesday, June 21, 2017

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி வர காரணம் யார்? : அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஸ்டாலின் விவாதம்
பதிவு செய்த நாள்20ஜூன்
2017
22:45

சென்னை: புதுக்கோட்டையில், அரசு மருத்துவக் கல்லுாரி துவங்க யார் காரணம் என்பதில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே, கடும் விவாதம் நடந்தது.

சட்டசபையில், நேற்று நடந்த கேள்வி நேர விவாதம்:

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்: 'புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லுாரி துவக்கப்படும்' என, தி.மு.க., ஆட்சியில், அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், ஜெ., நிதி ஒதுக்கி, மருத்துவக் கல்லுாரி வர, நடவடிக்கை எடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: இது தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன். அதை விவாதத்திற்கு எடுக்கும்போது, பேசலாம் என நினைத்திருந்தேன். கேள்வி நேரத்தில், அமைச்சர் கூறிய பதிலுக்கு, பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டதால், தற்போது பேசுகிறேன்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி திறப்பு விழா அழைப்பிதழில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் பெயர் இடம் பெற்றிருந்தது. அவர்களுக்கு முறைப்படி, அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அமைச்சரும், அவர்களை மொபைலில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.அதன்படி விழாவிற்கு செல்ல, அவர்கள் தயாரான போது, போலீசார், அவர்களை கைது செய்தனர்; இது கண்டிக்கத்தக்கது. தி.மு.க., ஆட்சியில், 2011 பிப்., 26ல், முதல்வராக இருந்த கருணாநிதி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், தற்போதைய தலைமைச் செயலரும், சுகாதாரத் துறை செயலரும் பங்கேற்றனர். 'புதுக்கோட்டையில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்கப்படும்' என, ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்த போதே, 'அடிக்கல் நாட்டிய திட்டத்தை, மீண்டும் அறிவிக்கிறீர்களே' என, எதிர்ப்பு தெரிவித்தோம்.அமைச்சர் விஜயபாஸ்கர்: நிதி ஒதுக்கி, இடம் தேர்வு செய்து, 'டெண்டர்' விட்ட பின், அடிக்கல் நாட்ட வேண்டும். நீங்கள் தேர்தல் வர இருந்ததால், அவசரமாக அரசாணை பிறப்பித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் சென்று விட்டீர்கள்.ஜெ., அரசு நிதி ஒதுக்கி, மருத்துவக் கல்லுாரி அமைத்தது. திறப்பு விழாவிற்கு வரும்படி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, போனில் நான் அழைப்பு விடுத்தது உண்மை தான். துறை செயலர், மாவட்ட கலெக்டர் ஆகியோரும் அழைத்தனர்.ஆனால், அவர்கள் விழாவிற்கு வரும் முதல்வருக்கு, கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக, தகவல் கிடைத்ததால், போலீசார் அவர்களை கைது செய்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில், அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில், நீங்கள் பேசும்போது, கறுப்புக்கொடி காட்ட, எம்.எல்.ஏ.,க்கள் அனுமதி கோரியதாகவும், நீங்கள் அனுமதி அளித்ததாகவும் பேசினீர்கள்.ஸ்டாலின்: என் பேச்சை தவறாக புரிந்துள்ளீர்கள். எம்.எல்.ஏ.,க்கள் என்னை தொடர்பு கொண்டு, 'அழைப்பிதழில் பெயர் போடாவிட்டால், கறுப்புக் கொடி காட்டலாமா' என கேட்டதற்கு, அனுமதி அளித்தேன்.
ஆனால், நீங்கள் அழைப்பிதழில் பெயர் போட்டதோடு, முறையாக அழைப்பிதழ் அனுப்பி, விழாவில் பங்கேற்கும்படி அழைத்தீர்கள். அதை ஏற்று, 'விழாவிற்கு சென்று, தொகுதி பிரச்னை இருந்தால், முதல்வரிடம் கோரிக்கை வையுங்கள்' என, தெரிவித்தேன். கறுப்புக் கொடி காட்டும் எண்ணம் இல்லை.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விழாவிற்கு வந்தால், மருத்துவக் கல்லுாரிக்கு, கருணாநிதி அடிக்கல் நாட்டியதை பேசுவர் என்பதால், அவர்கள் வருவதை தடுத்து விட்டீர்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024