Sunday, June 18, 2017

ஆடை முதல் மொபைல் வரை எல்லாமே ஆபர்தான்! ஜிஎஸ்டி நெருங்க நெருங்க கொட்டுது சலுகை மழை

2017-06-17@ 00:39:58




புதுடெல்லி: ஜிஎஸ்டியை எதிர்கொள்ள தயாரான வணிகர்கள், இந்த மாதத்துக்குள் தங்களிடம் உள்ள பொருட்களை அதிக தள்ளுபடிக்கு விற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதி்ப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டிக்கு பிறகு சில பொருட்கள் விலை கூடுகின்றன. சில விலை குறைகின்றன. ஜிஎஸ்டியால் விலை கூடும் பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. அதேசமயம் இருக்கின்றன ஸ்டாக்குகளை விற்றுத் தீர்ப்பதிலும் வர்த்தகர்கள் மும்முரம் காட்டுகின்றனர். ஆன்லைன் விற்பனை, ஷோரூம்கள் என அனைத்து இடங்களிலும் சலுகை மழை கொட்டுகிறது.

வீட்டு உபயோக பொருட்களுக்கு 20 முதல் 50 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது. டிவி, பிரிட்ஜ், ஏ.சி, வாஷிங்மெஷின் ஆகியவற்றின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இவற்றுக்கு 15 முதல் 20 சதவீதம் வரைதான் சலுகை இருக்கும். அதுவும், முக்கிய பண்டிகை விழாக்காலங்களில்தான் கிடைக்கும். தற்போது ஜிஎஸ்டியால் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது யோகம். சில வர்த்தகர்கள் டிவியுடன் 2 மாத டிடிஎச் இணைப்பை சலுகையாக தருகின்றனர். இதுபோல் சில டிவி நிறுவனங்கள் வாரண்டியை கூடுதல் காலத்துக்கு அளிக்கின்றன. கம்ப்ரசர் பொருத்தப்பட்ட பொருட்களான ஏசி, பிரிட்ஜ் ஆகியவற்றுக்கு சராசரியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றனர். ஆன்லைன் நிறுவனங்கள் தள்ளுபடியுடன் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளனர். சில நிறுவனங்கள் ரூ.20,000 வரை கேஷ்பேக் அளிப்பதாக தெரிவித்துள்ளன.

கார்களுக்கு ரகத்துக்கு ஏற்ப ரூ.15,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை சலுகை கிடைக்கிறது. இதுதவிர, இலவச காப்பீடு சலுகையையும் சில டீலர்கள் அளித்துள்ளனர். ஜிஎஸ்டிக்கு பிறகு சொகுசு கார் விலை குறையும் என்றாலும், ஸ்டாக்குகளை தீர்க்க சலுகைகளை ஏராளமாக வழங்கியுள்ளனர். மொபைல் போன்களுக்கும் அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன் தொடங்கி பல ஸ்மார்ட்போன் பிராண்ட்களுக்கு கேஷ்பேக் சலுகையுடன் 50 சதவீதம் வரையிலும் தள்ளுபடிகளை ஆன்லைன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு 15 சதவீத கேஷ்பேக், சில போன்களுக்கு 5,000 முதல் 20,000 வரை கேஷ்பேக் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் மானிடர்களுக்கு 35 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. சில வர்த்தக நிறுவனங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு கூட ரூ.2,000 வரை சலுகை அறிவித்துள்ளன.
ஆடைகளும் தள்ளுபடி ஆபர்களில் இருந்து தப்பவில்லை. தீபாவளிக்கு முன்னதாகவே இந்த சலுகைகள் ஜிஎஸ்டி புண்ணியத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளன.

வழக்கமான தள்ளுபடியை விட கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி, குறிப்பிட்ட அனைத்து ஆடை வகைகளுக்கும் 40% தள்ளுபடி, சில உயர்ரக ஆடை வகைகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி என ஷோரூம் வைத்துள்ள ஜவுளி வியாபாரிகள் மட்டுமின்றி பிரபல ஆடை நிறுவனங்களும் சலுகை அறிவித்துள்ளன. இதுகுறித்து வர்த்தகர்கள் கூறியதாவது: ஜிஎஸ்டியில் சில பொருட்களுக்கு வரி உயர்கிறது. சில விலை குறைகிறது. இருப்பினும். புதிய வரி விதிப்பு வரும்போது, ஸ்டாக்குகளுக்கு வரி கிரெடிட் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நிறைய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பழைய ஸ்டாக்குகளை விற்று தீர்த்துவிட்டால் இதற்கு அவசியமில்லை. அதோடு, புதிய வரி விதிப்பு அமலாகும்போது சரக்குகளும் புதிதாக இருக்கும். வரி கிரெடிட்டுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்காது. எனவேதான் தீபாவளி வரை ஸ்டாக் வைக்காமல் விற்று தீர்க்கிறோம்.

தற்போது எவ்வளவு விற்றாலும் ஜூலையில் விற்பனை பாதிக்க வாய்ப்புகள் அதிகம். பல நூறு கோடிக்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் இந்த மாதத்துக்குள் விற்பது எப்படி என திண்டாடுகின்றனர். இவர்கள்தான் அளவற்ற சலுகைகளை வாரி இறைத்துள்ளனர். நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் சலுகைகளை அளிக்க முன்வந்துள்ளன என்றனர். எப்படியோ, ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகுதான் சில பொருட்களின் விலை எந்த அளவு மாற்றம் இருக்கிறது என்பதை காண முடியும். ஆனால் அதற்கு முன்பாகவே நடைமுறை சிக்கல்களை தவிர்க்க பழைய ஸ்டாக்குகளை வியாபாரிகள் தீர்க்க முன்வந்ததால் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...