Saturday, October 14, 2017

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு 13 நாளுக்கு பின் ஊதியம்


2017-10-14@ 00:37:25




சிதம்பரம்: நிதி நெருக்கடியில் சிக்கி திணறிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தை சீரமைக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் நிதி நெருக்கடி சீரடையவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர்களுக்கு மாத இறுதியில் வழங்கப்பட்டு வந்த ஊதியம் தற்போது காலதாமதமாக வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் ஆசிரியர், ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தைக்கு பிறகு துணைவேந்தர் மணியன் நிருபர்களிடம் கூறுகையில், பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு நேற்று ஊதியம் போடப்பட்டுவிட்டது. நிதி சிக்கலால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி சிக்கல் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பாண்டியன் எம்எல்ஏ கூறியுள்ளார். என்றார். ஊதியம் வழங்கப்பட்டதால் ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 07.06.2026