Friday, October 20, 2017

கட்டணம் செலுத்தாத கல்லூரிகள் : அண்ணா பல்கலை கண்டனம்

'கட்டணம் செலுத்தாத கல்லுாரி மாணவர்கள், டிசம்பர் தேர்வில் பங்கேற்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது. அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை சார்பில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகளுக்கு, அந்தந்த கல்லுாரி நிர்வாகங்களே தேர்வு நடத்தி, திருத்தம் செய்கின்றன.

தேர்வு ஏற்பாடு : இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட, இணைப்பு இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, டிசம்பரில், தேர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், கல்லுாரி விபரங்கள், அண்ணா பல்கலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை, கல்லுாரிகளே வசூலித்து, அண்ணா பல்கலையில் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பல கல்லுாரிகள், தங்கள் மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலித்தாலும், அதை செலுத்தாமல் உள்ளன. 

சுற்றறிக்கை : இந்நிலையில், அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது. அதில், 'மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தை, அண்ணா பல்கலையில் செலுத்தும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே, தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும்; மற்றவர்களுக்கு கிடைக்காது. 
'அதனால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதற்கு, கல்லுாரிகளே பொறுப்பு' என, எச்சரித்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY