Thursday, October 12, 2017

திருத்துங்கள் தீர்ப்பை!


By ஆசிரியர்  |   Published on : 11th October 2017 01:14 AM  
சட்டத்தால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியாது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தையும் நாகரிக சமுதாயத்திற்கு ஏற்புடையதல்லாத பழக்க வழக்கங்களையும் மாற்றுவதில் சட்டம் நிச்சயமாக உதவுகிறது. 
ஆண் - பெண் உறவில் இருபாலரும் அன்பினால் பிணைக்கப்பட்டு பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது என்பது சமுதாயத்தாலும் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக மற்றவர் செயல்படுவதோ, வற்புறுத்துவதோ இயற்கை தனக்குத் தந்திருக்கும் பலத்தைப் பிரயோகித்து ஒரு பெண்ணை ஆண் தனது இச்சைக்கு உடன்பட கட்டுப்படுத்துவதோ பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இரண்டு வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், பாலியல் வன்கொடுமையின் அடிப்படையையே தகர்ப்பவையாகவும் அமைந்திருக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர் மொஹம்மூத் பரூக்கியைத் தனது நண்பராக கருதிய அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் பாலியல் கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டார். பாலியல் கொடுமைக்கு ஆளான அந்த அமெரிக்கப் பெண் தொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் மொஹம்மூத் பரூக்கியை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில், தில்லி உச்சநீதிமன்றம் மொஹம்மூத் பரூக்கியை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது. 
தயாரிப்பாளர் மொஹம்மூத் பரூக்கியுடன் பல ஆண்டுகளாக அந்த அமெரிக்கப் பெண்மணி நட்புப் பாராட்டி வந்தார் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக அந்தப் பெண்மணியின் முழு சம்மதம் பெறாமல், உறவு கொள்ள முற்பட்டதை எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்திவிட முடியாது. அந்த அமெரிக்கப் பெண் தன்னுடைய எதிர்ப்பை வன்மையாக தெரிவிக்கவில்லை என்றும், மிகவும் தயக்கத்துடன்தான் மொஹம்மூத் பரூக்கியின் பாலியல் ஆர்வத்துக்கு மறுப்புத் தெரிவித்தார் என்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்படுகிறது. 
'மனித மனநிலை சிலவேளை தயக்கத்துடனான மறுத்தலை, வெளிப்படுத்தாத சம்மதம் என்று எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும், உறவில் ஈடுபடுபவர்கள் அறிமுகமில்லாதவர்களாக இருந்தால் மட்டுமே தயக்கத்துடனான மறுத்தலை பாலியல் வன்கொடுமைக்குக் காரணமாக்க முடியும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பாலியல் வன்கொடுமை குறித்த சமூகத்தின் பார்வையை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டுபோய் நிறுத்துகிறது. இரண்டு காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் மதுரா என்கிற ஆதிவாசிப் பெண். அந்த இரண்டு காவல்துறையினரும் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அப்போது விடுவிக்கப்பட்டனர். 
மதுரா என்கிற அந்த ஆதிவாசிப் பெண் அதற்கு முன்னால் வேறு சிலருடன் பாலியல் உறவு கொண்டிருந்தவர் என்பதும், காவல்துறையினரால் வன்கொடுமைக்கு ஆளானபோது உதவி கேட்டு குரலெழுப்பவோ, அந்த காவல்துறையினரின் பலவந்தத்தை எதிர்த்துப் போராடவோ முயலவில்லை என்றும் அப்போது அந்தத் தீர்ப்பில் காரணங்கள் கூறப்பட்டன. மதுரா என்கிற ஆதிவாசிப் பெண்ணுக்கு அநீதி வழங்கப்பட்டது. அந்த அநீதிக்கு எதிராக இந்தியா முழுவதும் எழுந்த எதிர்ப்பின் விளைவுதான் கடுமையான பாலியல் வன்கொடுமைச் சட்டம்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் பெண்மணிக்கும், மதுரா என்கிற ஆதிவாசிப் பெண்ணுக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கும் தரப்பட்டிருக்கும் தீர்ப்புகளுக்கும் அதிக அளவிலான மாற்றம் காணப்படவில்லை. 'முடியாது, மாட்டேன், வேண்டாம்' என்பவை ஒரு பெண்ணால் முணுமுணுப்பாகவோ, செய்கையாலோ, உடல் மொழியாலோ மென்மையாகக் கூறப்பட்டாலும், வன்மையாகக் கூறப்பட்டாலும் அதன் பொருள் ஒன்றாகத்தான் இருக்க முடியுமே தவிர, அது 'ஏற்றுக்கொள்கிறேன்' என்பதாக இருக்க முடியாது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆணின் புரிதலின் அடிப்படையில் பெண்ணின் சம்மதம் கருதப்படுமேயானால், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் குற்றவாளிகள் நிரபராதிகளாகவும், பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்காதவர்களாகவும் மாறும் அவலம் ஏற்படும்.
இன்னொரு வழக்கில் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட மூன்று பேரின் 20 ஆண்டு தண்டனையை ரத்து செய்து அவர்களை நிரபராதிகள் என்று விடுவித்திருக்கிறது. காரணம், பாதிக்கப்பட்ட பெண் அதற்கு முன்னால் பலருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதும், பாலியல் உறவு கொள்வது அவருக்கு புதிதல்ல என்பதும். 
இது என்ன வேடிக்கை? ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டவராகவே இருந்தாலும்கூட, அவரது விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தப்பட்டால், அது பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்பதுதானே நியாயம்? இப்படியொரு தீர்ப்பை பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதிகளால் எப்படி தரமுடிந்தது என்பது வியப்பாக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் இந்த இரண்டு தீர்ப்புகளையும் மீள்பார்வை செய்து உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் திருத்தி எழுதியாக வேண்டும். இல்லையென்றால், பாலியல் வன்கொடுமைச் சட்டத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
 

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...