Monday, January 1, 2018

சென்னை:ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், அதிர்வு அலைகளை உருவாக்கி உள்ளது. பலர் வரவேற்று உள்ளனர்; சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும்

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்:

ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு, ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்; பாராட்டுகள். ரஜினியின் அரசியல் வருகையால், சாதகமோ பாதகமோ இல்லை. அதைப் பற்றி, தி.மு.க., கவலைப்படாது. தி.மு.க.,வை பொறுத்தவரை, அது ஏற்றுள்ள கொள்கையின் வழிமுறைப்படி, வெற்றிப் பாதையில் பயணிக்கும்.


அ.தி.மு.க., அமைச்சர் ஜெயகுமார்
:

யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம்; மக்களே இறுதி எஜமானர்கள். அவர்கள் தான், அரசை தீர்மானிக்க முடியும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகள். அவர், அ.தி.மு.க.,வை விமர்சித்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது; தி.மு.க.,வை கூட விமர்சித்திருக்கலாம்.


ஆர்.கே.நகர் தொகுதி, சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன்:

அரசியலுக்கு ரஜினி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலில், பல கட்சிகள் உருவாகலாம். வெற்றி என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ரஜினிக்கு என் வாழ்த்துகள்.


தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்:

ஊழலற்ற நிர்வாகத்தை தரவே, அரசியலுக்கு வருகிறேன் என, ரஜினி கூறி யிருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில், ஊழலை எதிர்த்து போராட, மேலும் பலம் தேவை. லோக்சபா தேர்தல் குறித்து, தேர்தல் நடக்கும் போது முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அவர், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பார் என்பது என் கணிப்பு.


தமிழக காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன்:

சட்டசபை தேர்தல் வரும் போது, கட்சி துவக்கப்போவதாக கூறியிருக்கிறார். புத்தாண்டில் அவரது படங்கள் வெளிவரவுள்ளன. அதற்காக, புதுவிதமாக அவர் கையாண்டுள்ள விளம்பர யுக்தி. முழுமையாக அரசியலுக்கு வரட்டும்; அப்போது பார்ப்போம்.


இ. கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன்:
ரஜினி, அரசியல் சீரழிவுகளை விமர்சித்து இருக்கிறார். 'சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்குவேன்; ஆன்மிக அரசியல் நடத்துவேன்' என்கிறார். ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகள் தான், மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை; ஆனால், அதில், போட்டியிடப் போவதில்லை என, கூறி உள்ளார். அவரது அறிவிப்பு, ரசிகர்களை ஒருங் கிணைக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறோம்


விடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவன்:

ரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மிக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன்படி, இடதுசாரிகளுடனும் சேராமல், பா.ஜ.,வுடனும் சேராமல், தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என, கருதுகிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்த பின், ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு எடுப்போம்.


த.மா.கா., தலைவர், வாசன்:
ரஜினி, அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில், அரசியல் கட்சியை துவக்குவதற்கும், அதன் சார்பில் மக்களை சந்திப்பதற்கும் யாரும் இடையூறாக இருக்க முடியாது. மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அங்கீகாரம் பெறலாம்; மக்கள் தான் எஜமானர்கள்.


முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி:


ரஜினியின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். அவர், என் நெருங்கிய நண்பர்.கருணாநிதிக்கும், அவரை பிடிக்கும். அவரது வருகை, அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். விரைவில், அவரை நேரில் சந்திப்பேன்.இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர்களும் அரசியலும்

இந்தியாவில், அரசியல் கட்சி தொடங்கிய, சில முன்னணி நடிகர்கள்.என்.டி.ராமாராவ் -ஆந்திராவில், 1982ல், தெலுங்கு தேசம்கட்சியை துவக்கினார். 1983ல் முதல்வரானார். மூன்று முறை முதல்வராக இருந்தார். இவரது மறைவுக்குப் பின்பும், கட்சி இயங்குகிறது. முதல்வராக, சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.

சிரஞ்சீவி - பிரஜா ராஜ்யம்

ஆந்திராவில், 2008ல், பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார். முதல் தேர்தலில், 18 தொகுதிகளில்


கட்சி வென்றது. பின், 2011ல், காங்., உடன் கட்சியை இணைத்தார்.


எம்.ஜி.ஆர்.,

தமிழகத்தில் அ.தி.மு.க.,வை, 1972ல், எம்.ஜி.ஆர்., துவக்கினார். 1977ல், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவரது கட்சி ஆட்சியை பிடித்தது. 1987ல் மறையும் வரை, தொடர்ச்சி யாக மூன்றுமுறை முதல்வராக இருந்தார். மறைவுக்குப் பின், கட்சி இயங்குகிறது.

சிவாஜி கணேசன்

சினிமாவில் சாதித்த இவர், 1988ல், தமிழக முன்னேற்ற முன்னணியை துவக்கினார். ஆனால், அரசியலில் சாதிக்க முடியவில்லை. கட்சியை கலைத்துவிட்டார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க.,வை, 2005ல் துவக்கினார். 2006 தேர்தலில், விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, 29 இடங்களில் வென்றது இக்கட்சி. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவ ரானார். 2016 தேர்தலில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

சரத்குமார்


கடந்த, 2007ல், சமத்துவ மக்கள் கட்சியை துவக்கினார். 2011 தேர்தலில், இவர் உட்பட இருவர் வெற்றி பெற்றனர். 2016 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை.


டி.ராஜேந்தர்:தி.மு.க., வில் இருந்து பிரிந்து, 2004ல், லட்சிய தி.மு.க., கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.

கார்த்திக்: கடந்த, 2009ல், நாடாளும் மக்கள் கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.

சீமான்

இவர், 2010ல், நாம் தமிழர் கட்சியை துவக்கினார். 2016 தேர்தல் களத்தில், தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024