Monday, May 23, 2016

புதுடெல்லி மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி. நட்டா இன்று சந்திக்கிறார். பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தித்தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி கடந்த 1–ந் தேதி நடந்த நுழைவுத்தேர்வை சுமார் 6½ லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். ஜூன் 24–ந் தேதி இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. ஆனால் இப்படி நுழைவுத்தேர்வு நடத்தினால், அது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்களுடன், சி.பி.எஸ்.இ., என்னும் மத்திய செகண்டரி கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்களுடன் அவர்கள் போட்டி போட முடியாது என்பதால் இந்த நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. அவசர சட்டம் இந்த ஆண்டு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, இந்த ஆண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக்கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி விளக்கம் கேட்கிறார் அந்த அவசர சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடனே ஒப்புதல் அளித்து விடாமல் இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த அவசர சட்டத்துக்கு என்ன அவசியம் வந்தது என்று விளக்கம் அளிக்குமாறு அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் கேட்டுள்ளார். மந்திரி நேரில் விளக்கம் இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா இன்று (திங்கட்கிழமை) நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (செவ்வாய்க்கிழமை) சீனா செல்கிறார் என்பது நினைவு கூரத்தக்கது. எனவே, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ஒப்புதல் வழங்கி விட்டால் மருத்துவம், பல் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு உண்டா, இல்லையா என்ற மாணவர்களின் குழப்பம் முடிவுக்கு வந்து விடும். மாநில கல்வி வாரியத்தின்கீழ் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு எழுத தேவை இருக்காது. மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுகளுக்குரிய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் பொது நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைபெற வழிபிறக்கும்.

No comments:

Post a Comment

Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions

  Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions The Madras High Court ...