Friday, October 20, 2017

நிமிடத்துக்கு ஒரு ரூபாயில் பேசலாம்! ராணுவத்திற்கு மத்திய அரசு சலுகை

புதுடில்லி: எல்லையோரங்களிலும், அடர்ந்த பனிமலைப் பிரதேசங்களிலும் பணியாற்றும் பாதுகாப்பு படையினர், தங்கள் குடும்பத்தினருடன், 'சேட்டிலைட்' போனில் பேசுவதற்கு, மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. 

ஒரு நிமிடம் பேசுவதற்கு, ஐந்து ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது, ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், சேட்டிலைட் போனுக்கான மாத வாடகை கட்டணமும், ரத்து செய்யப்பட்டு உள்ளது.போதிய அடிப்படை வசதிகள், மொபைல் போன் சேவை இல்லாத தொலைதுார பகுதிகளில், எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் பணியாற்றுகின்றனர்.

சேட்டிலைட் போன் வசதி : ஜம்மு - காஷ்மீர் போன்ற பனி பிரதேசங்களில், நம் ராணுவத்தினர், நாட்டுக்காக பணியாற்றுகின்றனர். இவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்காக, சேட்டிலைட் போன் வசதியை, மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. 
இந்த சேட்டிலைட் போனுக்கான இணைப்பை பெற, மாதம், 500 ரூபாய் வாடகையாக செலுத்த வேண்டும். மேலும், போனில் பேசுவதற்கு, நிமிடத்துக்கு ஒரு ரூபாய், கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. தற்போது, 2,500 சேட்டிலைட் போன்கள் மட்டுமே, பயன்பாட்டில் உள்ளன. இதனால், பாதுகாப்பு படையினர், தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு அதிகம் சிரமப்படுவதுடன், அதிகம் செலவும் செய்ய வேண்டியுள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதிகமான இணைப்பு
இது குறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா கூறியதாவது:
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு, தீபாவளி பரிசாக, சேட்டிலைட் போன்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. 
இனி மேல், சேட்டிலைட் போனில் பேசுவதற்கு, நிமிடத்துக்கு, ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.மேலும், சேட்டிலைட் போனுக்கான இணைப்பை பெற்றவர்களிடமிருந்து, மாதந்தோறும், 500 ரூபாய் கட்டணமாக, தற்போது வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை, இனிமேல் செலுத்த வேண்டியது இல்லை.இதுவரை, சேட்டிலைட் போன் இணைப்பு வசதியை, டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் வழங்கியது. தற்போது, அரசு துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., இந்த வசதியை வழங்குகிறது. மேலும், அதிகமான சேட்டிலைட் போன் இணைப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY