Friday, October 20, 2017

மொபைல் போன் எண் - 'ஆதார்' இணைப்பு  கைரேகை பொருந்தாததால் சிக்கல்

கைரேகை பொருந்தாததால், மொபைல் போன் எண்ணை, 'ஆதார்' எண்ணுடன் இணைக்க முடியாமல், ஏராளமானோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.





நாடு முழுவதும், மொபைல் போன் வாடிக்கையாளர்கள், 2018 பிப்ரவரிக்குள், மொபைல் போன் எண்ணை, 'ஆதார்' எண்ணுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மொபைல் போன் வாடிக்கையாளர் சேவை மையங்களில், கூட்டம் நிரம்பி வழிகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும், பலர், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்புவதாக புகார்
எழுந்துள்ளது.

ஒத்துப் போவது இல்லை

இது குறித்து, மத்திய அரசின், பொது சேவை மையத்தை நடத்துவோர் கூறியதாவது:ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைப்பதற்கு, 'பயோ மெட்ரிக்' கருவியில், கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் முதியோரின் விரல் ரேகை, ஆதார் தகவல் பதிவேட்டில் பதிவாகி உள்ள, விரல் ரேகைகளுடன் ஒத்துப் போவது இல்லை.முதியோர் மட்டுமின்றி, பாத்திரம் தேய்த்தல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள, ஏராளமானோரின் கை ரேகையும் ஒத்துப் போவதில்லை. 

அதனால், ஆதார் மையங்களுக்கு சென்று, கைவிரல் ரேகையை புதிதாக பதிவு செய்து, மீண்டும் வருகின்றனர்.அந்த புதிய ரேகை கூட, பலருக்கு ஒத்துப் போகவில்லை. அதனால், ஆயிரக்கணக்கானோர், 'ஆதார்' எண்ணை, மொபைல் எண்ணுடன் இணைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலரது விரல் ரேகைகள், தேய்ந்து போனது காரணமாக இருக்கக் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவனம் செலுத்துமா அரசு?

பொதுமக்களின், 'ஆதார்' விபரங்கள் மற்றும் கைவிரல் ரேகைகளை, தமிழக அரசின், கேபிள், 'டிவி' நிறுவனத்தின், ஆதார் பதிவு மையத்தினர் தான் பதிவு செய்கின்றனர். அது, பெங்களூரில் உள்ள, ஆதார் அட்டை தயாரித்து அனுப்பும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ எண் அடையாள ஆணையத்தின் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. எனவே, அரசு அதிகாரிகள், யு.ஐ.டி.ஏ.ஐ., நிறுவனத்துடன் பேசி, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே, பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY