கதை கேளு... கதை கேளு...
பதிவு செய்த நாள்11அக்
2017
23:11
மதுரை: கூட்டுக் குடும்பங்களில் ஆஸ்தான கதை சொல்லிகளான தாத்தா, பாட்டி உறவுகளை இழந்து, 'ஜாலி வாழ்க்கை' என்ற பெயரில் தனிக் குடித்தனம் புகுந்தோரின் செல்ல குழந்தைகள் கைகளில் தற்போது கணினி, அலைபேசிகளும் தான் தவழுகின்றன.
மாணவரின் கற்பனை திறன் வளர்வதே கதை கேட்பது என்பதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. இந்த உன்னதத்தை மறந்தவர்களுக்கு மத்தியில், அதை இயக்கமாக துவங்கி பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறார் குமார்ஷா.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துாரை சேர்ந்த இவர், 2013ல் 'கதை சொல்கிறோம் வாங்க' என்ற இயக்கம் துவங்கி 100 நாட்கள் சைக்கிள் பயணமாக ஜூலை 7ல் பொள்ளாட்சி ஆலியாறில் துவக்கிய பணயம், 94வது நாளில் மதுரை வந்தார்.
ஒத்தக்கடை தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஒருமணிநேரம் கதைகள் சொல்லி உற்சாகப்படுத்திய அவருக்கு தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குமார்ஷா கூறியதாவது: சிறு வயதில் கதைகள் கேட்பதிலும், ஊர் சுற்றுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. அந்தந்த வட்டார பகுதிகளில் வலம் வரும் கதைகள், ஆச்சரிய மூட்டும் சம்பவங்களை கேட்டு அறிவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் ஒரு முறை பஸ், மற்றொரு முறை ரயில் என இரண்டு முறை இந்தியாவை சுற்றி வந்துள்ளேன். பொதுவாக சிறுவர் கதை கேட்பது மூலம் அவர்களின் கற்பனை திறன் அதிகரிக்கும். ஆனால் கூட்டுக் குடும்ப முறை சிதைவு காரணமாக தற்போது தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்கும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. பெற்றோர் வேலை... வேலை... எனச் சென்று விடுகின்றனர். குழந்தைகள் தொழில்நுட்ப பொழுதுபோக்கில் மூழ்கி விடுகின்றன. தமிழகத்தில் நிலங்கள் சார்ந்த கதைகள் ஏராளமாக உள்ளன. தாத்தா பாட்டி இல்லாத மாணவர்களின் குறையை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு ஊர் ஊராக சுற்றி கதைகள் சொல்லி வருகிறேன்.கதை கேட்பது என்றால் இயற்கையாகவே நமக்கு ஆர்வம் ஏற்படும். சினிமா, டிவி, கலைகள் என எந்த களங்கள் மூலமும் கதைகளை சொல்லலாம். நாம் சொல்வது மாணவர்களுக்கு புரிய வேண்டும். அவர்களிடமிருந்து கிடைக்கும் உற்சாகம் தான் கதை புரிந்ததற்கான அர்த்தம். அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ற கதைகளை, அவர்களின் அவர்கள் 'ஸ்லாங்'கிலேயே சொன்னால் தான் கேட்கும் ஆர்வம் ஏற்படும். அதை பழகிக்கொண்டேன்.
வரலாறு, கலாசாரம், பண்பாடு சார்ந்த கதைகளை குறைத்து விட்டு மாணவர்களிடம் சிறிதுநேரம் கலந்துரையாடி அவர்கள் எதில் ஆர்வத்துடன் இருக்கிறார்களோ அதை புரிந்து அவர்கள் சிந்திக்கும் வகையிலான கதைகள் நான் சொல்லும்போது தான் என்னை கவனிக்கின்றனர்.
அந்தந்த மாவட்டங்களில் இலக்கிய வட்டங்களில் தொடர்புள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் எனக்கு ஆதரவு தருகின்றனர். கதை சொல்வதற்காக பணம் பெறுவதில்லை. மாணவர்களுக்கும் கற்றல் முறைக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தும் வகையிலான என் முயற்சிக்கு சிறிதாவது வெற்றி கிடைக்கும், என்றார்.
தலைமையாசிரியர் தென்னவன் கூறுகையில், "குழந்தை பருவத்தில் கதை கேட்பதால் கற்பனை ஆற்றல் அதிகரிப்பதுடன், எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல், பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காணும் திறனும் ஏற்படும்," என்றார்.
No comments:
Post a Comment