Friday, October 20, 2017

என்ன செய்யப் போகிறோம்?


By ஆசிரியர்  |   Published on : 20th October 2017 03:26 AM  
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீணான மின்னணு, மின்சாதனக் கழிவுகளின் அளவு ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. இ-வேஸ்ட் என்று பரவலாக அறியப்படும் மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக இருந்தாலும்கூட, பெரும்பாலான மேலைநாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் முறையான செயல்திட்டத்தின் மூலம் இதுகுறித்த நடவடிகைகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் செயல்படாமல் இருப்பதும் இந்தியாவை பேராபத்துக்கு தள்ள இருக்கிறது. 
"மின்னணு - மின்சாதனக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2011'-இல் சில திருத்தங்களை ஏற்படுத்தி, கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 
இ-வேஸ்ட் மேலாண்மை விதிகள் 2016-ஐ அறிவித்தது. அரசு இந்தப் பிரச்னையில் முழு மூச்சுடன் இறங்கி ஏனைய உலக நாடுகளைப்போல மின்னணு, மின்சாதனக் கழிவுகளை கையாள, தகுந்த நடவடிக்கைகளை என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
2011 இ-வேஸ்ட் மேலாண்மை விதிகளில் காணப்பட்ட மின்னணு, மின்சாதனக் கழிவுகள் மட்டுமல்லாமல் இது தொடர்பான கருவிகள், உதிரிபாகங்கள் அனைத்தையும் 2016-இல் கொண்டு வரப்பட்ட திருத்தம் உள்ளடக்கியது. மேலும், சி.எஃப்.எல். எனப்படும் புளோரஸன்ட் விளக்குகள் உள்ளிட்ட பாதரசத்தை பயன்படுத்தும் அனைத்து மின்சாதனங்களும் இ-கழிவுகளாக அந்தத் திருத்தத்தில் இணைக்கப்பட்டது. 
2016-இல் திருத்தம் செய்யப்பட்ட இ-வேஸ்ட் மேலாண்மை விதிகளின்படி மின்னணு, மின்சாதனக் கழிவுகளை சேகரிக்கும் பொறுப்பு அதன் உற்பத்தியாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் விற்பனை செய்த மின்னணு, மின்சாதனங்களின் கழிவுகளை அரசு கண்காணித்து உறுதிப்படுத்தவில்லை.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பழுதான மின்னணு, மின்சாதனப் பொருள்களைத் திரும்பப் பெற்று மறுசுழற்சிக்கு அல்லது அழித்தொழிப்புக்கு தயாரிப்பாளர்கள் வழிகோல வேண்டும் என்பதைத் திருத்தப்பட்ட விதிமுறை விரிவாகவே விளக்கியது. உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனை முகவர்கள் அல்லது நியமிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் தங்கள் நிறுவனத்தின் மின்னணு, மின்சாதனக் கழிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறதே தவிர, அது நடைமுறைப்படுத்தப்படாமல் தொடர்கிறது. 
சட்டத்திருத்தத்தின்படி ஏழு ஆண்டுகளில் விற்பனை செய்த மின்னணு, மின்சாதனப் பொருள்கள் 30% முதல் 70% வரை தயாரிப்பாளர்களால் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது விதி. இதற்கு விற்பனையாளர்கள் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்று கழிவுகளை பொருள்களை தரும்போது திருப்பித் தரலாம் அல்லது வாடிக்கையாளர் புதிதாக வாங்கும் மின்னணு, மின்சாதனங்களின் விலையில் ஒரு குறிப்பிட்டத் தொகை கழித்துக் கொள்ளப்
படலாம் என்றெல்லாம் அந்த சட்டத்திருத்தத்தில் பரிந்துரைகள் தரப்பட்டிருக்கின்றன. 
ஆண்டொன்றுக்கு இந்தியாவில் ஏறத்தாழ 17 லட்சம் டன் மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உருவாகின்றன. ஆசியாவில், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்தபடியாக மிக அதிகமான மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உருவாகும் நாடு இந்தியா. ஆனால், நமது நாட்டில் உருவாகும் மொத்த மின்கழிவுகளில் 1.5% மட்டுமே மறுசுழற்சிக்கோ அல்லது அழித்தொழிப்புக்கோ உட்படுகின்றன. மின்கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 10 விழுக்காடு என்ற அளவில் அதிகரிக்குமானால், இந்தக் கழிவுகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஒட்டுமொத்த இந்தியர்களையும் மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாக்கக்கூடும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் பழைய செல்லிடப்பேசிகள் (1800%), கணினிகள் (500%), ஏனைய மின்னணு சாதனங்களின் கழிவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். அவற்றில் 98% ஏனைய சாதாரணக் கழிவுகளுடன் கலந்து குப்பைகளாகச் சேர்க்கப்படும்போது, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதாரக் கேடும் மிகவும் கடுமையானதாக இருக்கும். 
இந்த மின்னணு, மின்சாதனக் கழிவுகளில் காணப்படும் பாதரசம், ஈயம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் மிகவும் ஆபத்தானவை. பாதுகாப்பில்லாத இ-கழிவுகளின் மறுசுழற்சி அல்லது குப்பைக் கூளங்களில் சேர்க்கப்படுதல் மூலமாக நிலத்தடி நீர், வாயு மண்டலம் ஆகியவற்றில் இவற்றின் கதிர்வீச்சு கலந்துவிடுகிறது. இ-கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்களில் 80% பேர் கடுமையான நுரையீரல் நோய்களுக்கு ஆளாகிறார்கள் எனும்போது தண்ணீரிலும், காற்றிலும் ஏற்படுத்தும் நச்சு எந்த அளவுக்கு பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
குழல் விளக்குகள், கணினி மதர்போர்டு உள்ளிட்ட உதிரிபாகங்கள், கணினி பிரிண்டர்களின் டோனர் கார்ட்ரிட்ஜ்கள் ஆகியவை பாதரசம், காட்மியம் ஆகியவற்றை காற்று மண்டலத்தில் பரப்புகின்றன. இது தெரிந்தும்கூட தயாரிப்பாளர்கள் அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களில் 10% கூட கழிவுகளாக திரும்பப் பெற்று அவற்றை அழித்தொழிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. 
ஜப்பானில் 50% முதல் 60%, தென்கொரியாவில் 55% முதல் 70%, பிரிட்டனில் 50% முதல் 80%, நெதர்லாந்தில் 45% முதல் 75% கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அல்லது ஒழித்தலுக்கு அனுப்பப்படும்போது இந்தியாவில் ஏன் இன்னும் 1.5% மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது? மின்னணு, மின்சாதனப் பொருள்கள் வளர்ச்சியின் அடையாளம் மட்டுமல்ல, பேராபத்தின் அடையாளங்களும்கூட என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோமோ?

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...