Wednesday, October 11, 2017



DINAMALAR

ஐந்து நாள், 'பரோல்' முடிந்து, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல வேண்டி இருப்பதால், சசிகலா மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளார்; அத்துடன், கலக்கமும் அடைந்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வராத தாலும், எதிர்பார்த்த அரசியல் மாற்றங்கள் நிகழாததாலும், விரக்தியில் உள்ளார்.



சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்ரவரி மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவரை பார்ப்பதற்காக, 15 நாள், 'பரோல்' கோரி, சசிகலா விண்ணப்பித்தார். ஆனால், கர்நாடக சிறைத்துறை, ஐந்து நாள் மட்டுமே வழங்கியது. இதையடுத்து,6ம் தேதி மாலை, பெங்களூரில் இருந்து காரில் சென்னை வந்தார். அவருக்கு, அ.தி.மு.க.,வில் செல்வாக்கு உள்ளது என்பதை காட்ட, தினகரன் ஆதரவாளர்கள், ஆங்காங்கே வரவேற்பு அளிக்க, ஏற்பாடு செய்திருந்தனர்; அவர் வந்த கார் மீது, பூக்களை துாவினர்.

வரவேற்பு

மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவரை பார்க்க, பரோலில் வந்தவருக்கு, ஆடம்பர வரவேற்பு அளிக்கப் பட்டது, பொதுமக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.'சசிகலாவை பார்க்க, 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள்,10 பேரும், 21 எம்.எல்.ஏ.,க் களும் அணிவகுத்து வருவர்; தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்' என, தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உளவுத்துறையினர் கண்காணிப்பு காரணமாக, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. தினகரன் ஆதரவாளர்களாக உள்ள, இரண்டு எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., கருணாஸ் மட்டுமே, சசிகலாவை சந்திக்க, அவரது வீட்டிற்கு சென்றனர்.மறுநாள் சசிகலா, மருத்துவ மனையில் சிகிச்சை பெறும், கணவரை சந்திக்க சென்றார். அப்போதும், அவரை சந்திக்க யாரும் வரவில்லை.

சசிகலாவும்,சில மணி நேரம் மட்டுமே, மருத்துவமனையில் இருந்தார். மீதி நேரம்,சென்னை, தி.நகரில் உள்ளவீட்டிலேயே தங்கி இருந்தார். அவரது குடும்ப உறவினர்கள் தான், அவரை சந்தித்து பேசினர். அப்போது, சொத்து பிரச்னை எழுந்து உள்ளது; கடும் வாக்கு வாதமும் நடந்துள்ளது.கட்சியும், ஆட்சியும் கையை விட்டுபோன நிலையில், உறவினர்கள் இடையே,சொத்து பிரச்னை பெரிதாக வெடித்து உள்ளது,அவரை கவலை அடைய செய்துள்ளது.
சந்திக்க மறுப்பு

இதற்கிடையே, தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, போனில் சசிகலா தொடர்பு கொண்டுள்ளார்; பலர் போனை எடுக்கவே இல்லை. ஓரிருவர் பேசி உள்ளனர்; ஆனால், சந்திக்க வர மறுத்து விட்டனர்.சிறைக்கு சென்ற போது, தனக்கு ஆதரவாக இருந்தோர், தற்போது எதிரிகளாக இருப்பது, அவரை சோகம் அடையச் செய்து உள்ளது.கணவரை பார்ப்பதற்காக, பரோலில் வந்தவர், மருத்துவமனையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே இருந்ததை, சமூக வலை தளத்தினர், 'கலாய்த்து' வருகின்றனர்.

அவர், பெரும்பாலான நேரம், குடும்ப பிரச்னை, அரசியல் பிரச்னை குறித்தே, உறவினர்களிடம் பேசி உள்ளார்.அவர் எதிர்பார்த்து வந்த எதுவும் நடைபெறாத நிலையில், இன்று மாலை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி உள்ளதால், கடும் சோகத்தில் இருப்பதாக, அவரது ஆதரவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...