Thursday, January 11, 2018


எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா என மக்கள்... கொதிப்பு! எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளத்தை, 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான, சட்ட மசோதாவை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனால், கொதிப்படைந்துள்ள மக்கள், 'எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா; இதற்கு மட்டும், நிதி நெருக்கடி இல்லையா' என, கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சம்பள உயர்வை, ஏற்கனவே முதல்வர் அறிவித்த அன்று, தி.மு.க.,வரவேற்றது; இன்று எதிர்ப்பு நாடகமாடுவதாக, சபாநாயகர் தனபால் கிண்டல் அடித்தார்.




சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ., சம்பள உயர்வு மசோதாவில்கூறப்பட்டுள்ளதாவது: எம்.எல்.ஏ.,க்களின் மாதாந்திர சம்பளம், 8,000 ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி, 7,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரமாகவும்; டெலிபோன் படி, 5,000 இருந்து, 7,500 ரூபாயாகவும்...

தொகுதிப்படி, 10 ஆயிரத்தில் இருந்து, 25 ஆயிரமாகவும்; தொகுப்புப்படி, 2,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாகவும்; வாகனப் படி, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.தற்போது வழங்கப்படும் அஞ்சல் படி, 2,500 ரூபாயாக, தொடர்ந்து வழங்கப்படும். இதன்மூலம், தற்போது எம்.எல்.ஏ.,க்கள், சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து, மாதம் தோறும், 55 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இம்மாதம் முதல், 1.05 லட்சம் ரூபாய் பெறுவர்.

ஈட்டுப்படி

அமைச்சர்கள், சபாநாயகர்ஆகியோருக்கு, ஈட்டுப்படி, 15 ஆயிரம் ரூபாயாகவும், சில்லரை செலவினப்படி, 10 ஆயிரம் ரூபாயாகவும், தொகுதிப்படி, 25 ஆயிரம் ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும். துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி, 15 ஆயிரம் ரூபாயாகவும், சில்லரை செலவினப்படி, 7,500 ரூபாயாகவும், தொகுதிப்படி, 25 ஆயிரம் ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாத ஓய்வூதியம், 12 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்.


முன்னாள், எம்.எல்.ஏ.,க்களின் மருத்துவ சிகிச்சை தொகை, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

அறிவித்தார்

'உயர்த்தப்பட்ட சம்பளம்,ஓய்வூதியம் மற்றும் இதர படிகள், 2016 ஜூலை, 1 முதல்வழங்கப்படும்' என, 2017 ஜூலை மாதம், சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சம்பள உயர்வு வழங்குவதற்காக, சட்டசபையில், நேற்று சட்ட மசோதாவை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதை ஆரம்ப நிலையிலே, தி.மு.க., எதிர்ப்பதாக, அக்கட்சி கொறடா, சக்கரபாணி தெரிவித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரனும் எதிர்ப்பதாக கூறினார்.அப்போது, சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, 'அன்று மேஜையை தட்டி, மகிழ்ச்சி தெரிவித்தீர்கள்; இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்' என, கிண்டல் செய்தார். இந்த மசோதா, சட்டசபை கூட்டத்தொடர், நிறைவு நாளில் நிறைவேற்றப்படும்.

'இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு, 25.32 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும். போக்குவரத்து தொழிலாளர்கள், ஊதிய உயர்வுக்காக, வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில், எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம், இரு மடங்காக உயர்த்த வேண்டியது அவசியமா; இதற்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லையா' என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

'தேர்தலில், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, வெற்றி பெறுவோருக்கு, அரசாங்க சம்பளம் எதற்கு' என்றும், 'சம்பளமே அனாவசியம் என்கிறபோது, இரு மடங்கு உயர்வு என்பது அநியாயம்' என்றும், சமூக வலைதளங்களில், அரசுக்கு எதிராக, ஆவேச கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 28.10.2024