Tuesday, February 17, 2015

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை!



சென்னை: கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படும். வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை விரைவில் வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இத்திட்டத்தின் இரண்டாவது கட்ட வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியை மாநில அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கவும், சென்னை மாநகர மக்களுக்கு மேலும் பயன்தரச் செய்யவும், இந்த கூடுதல் வழித்தடத் திட்டங்களை செயல்படுத்திட மாநில அரசுக்கு மத்திய அரசு உதவும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024