Thursday, October 12, 2017

'18 வயதுக்கு உட்பட்ட மனைவியுடன் உறவும்  பாலியல் பலாத்காரமே'

புதுடில்லி: 'மனைவியாக இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடனான உறவு, பாலியல் பலாத்காரமே' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.




இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின், 375வது பிரிவின்படி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடனான உறவு, பாலியல் பலாத்கார குற்றமாக பார்க்கப்படுகிறது; அதே நேரத்தில், 15 - 18 வயதுள்ள, மனைவியுடனான உறவுக்கு மட்டும், விதிவிலக்கு அளிக்கப்படுகிறது; அது,
பாலியல் பலாத்காரமாகாது என, கூறப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தை திருமணம் தொடர்பான, மற்ற சட்டங்களில், 18 வயதுக்கு உட்பட்டவருடன், அது மனைவியாக இருந்தாலும்,இணக்கத்துடன் உறவு வைத்தாலும், அது, பாலியல் பலாத்காரமாகவே பார்க்கப்படுகிறது.

விதிவிலக்கு

இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், வேறொரு வழக்கில், நீதிபதிகள், மதன் பி.லோகுர், தீபக் குப்தா அமர்வு, தனித்தனியாக அளித்துள்ள ஒருமித்த தீர்ப்பு:

இது போன்ற விஷயங்களில், விதிவிலக்கு என்பது,ஒருதலைபட்சமானது, பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால், 18 வயதுக்கு உட்பட்ட பெண், மனைவியாக இருந்தாலும், அவருடன், கணவன் உறவு வைத்தால், அது பாலியல் பலாத்காரமே.பாகுபாடு கூடாது. குழந்தை

திருமணங்களை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மைனர் பெண், மைனர் திருமணமான பெண் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இதே பிரச்னை தொடர்பான வழக்குகளுக்கும், இந்த வழக்குக்கும், எந்தத் தொடர்பும் கிடையாது. அதே நேரத்தில், இந்த தீர்ப்பு, அந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதற்கு உதவலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறிஉள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.07.2026