Sunday, October 1, 2017

வரலாறு தந்த வார்த்தை - 2: ‘வாழைப்பழ’ காமெடி!

Published : 26 Sep 2017 11:20 IST

ந.வினோத் குமார்





பழம் என்றாலே பிரச்சினைதான் போல. ஞானப்பழம் என்றாலும் சரி. வாழைப்பழம் என்றாலும் சரி. சுட்டபழம் என்றாலும் சரி!


சரி, சரி…விஷயத்துக்கு வருவோம். நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் புதிதாக வந்து சேர்ந்த மேலாளர், யாரையுமே கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் சில விஷயங்களைச் செய்துவிடுவார். சில நாட்களுக்குப் பிறகு, அவருக்கும் மேலே இருக்கும் ‘ஊப்பர்வாலா’, ‘யாரைக் கேட்டு இதெல்லாம் செய்தாய். இந்த கம்பெனியை ‘Banana republic’ ஆக நினைக்காதே!’ என்று செம ‘ரெய்டு’ விடுவார். ஊடக நிறுவனங்கள் பலவற்றில் மேற்சொன்ன சொற்றொடரை அடிக்கடி கேட்கலாம்.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளில், அவ்வப்போது ஏதேனும் விபரீதம் நடந்துகொண்டே இருக்கும். அதைக் குறிப்பிடவே இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக, இது கார்ப்பரேட் நிறுவனங்களிலும் கையாளப்படுகிறது.

சரி… இந்தச் சொற்றொடர் பிறந்ததற்குக் காரணமே வாழைப்பழம்தான் என்றால் நம்புவீர்களா? ஆம். 19-ம் நூற்றாண்டில், அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, ஈக்குவேடார் போன்ற தென் அமெரிக்க நாடுகள் பலவும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தன. அங்கு வாழைப்பழம் அதிகமாக விளையும். எனவே, வாழைப்பழம்தான் அந்த நாடுகளின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக இருந்தது.

தவிர, இந்த நாடுகளில் அவ்வப்போது ஆட்சிக் கலைப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற அரசியல் குளறுபடிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்குக் காரணம், தங்களின் இலக்குகளைச் சாதிப்பதற்கு, வெளிநாட்டிலிருந்து வந்த பழ நிறுவனங்கள் அந்த நாடுகளில் பல கைங்கரியங்களை நிகழ்த்தியதுதான்.

‘அவன் கிடக்கான். பித்தளை தட்டுல சாப்பிடுறவன்’ என்று ஒருவரை அவமானப்படுத்த எப்படிப் பித்தளையைப் பயன்படுத்துகிறோமோ, அதுபோல வளர்ந்த நாடுகள், சுய புத்தி இல்லாமல், யார் எது சொன்னாலும், அதற்கேற்றபடி ஆடி வந்த மேற்சொன்ன நாடுகளைச் சிறுமைப்படுத்த ‘வாழைப்பழக் குடியரசு’ என்று அழைத்தன.

இப்படித்தான் இந்தச் சொற்றொடர் மக்களின் புழக்கத்துக்கு வந்தது. சரி… இந்தச் சொற்றொடரை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா? பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஓ.ஹென்றி!

ஆக, அந்த ‘இன்னொரு பழம்’, இதுதானா?

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024