Sunday, May 7, 2017

சித்ரா பவுர்ணமி: தலைகளால் நிறையும் கிரி மலை!

பதிவு செய்த நாள் 07 மே 2017 02:06



 இறைவனின் உறைவிடமா, இயற்கையின் மறைவிடமா என்று ஒரு கணம் யோசிக்க வைக்கிறது அந்த எழில் வனம்;

பனித்துளியின் ஈரத்தோடு, பச்சை போர்த்திக் கொண்டுள்ள மலையின் மீது, இச்சை கொள்கிறது மனம்; கண்களுக்குத் தெரியாத காற்றிலே கலந்து, இதயத்தின் ஆழம் வரை பரவுகிறது கற்பூரத்தின் மணம்; கடவுளே கரம் பிடித்து அழைத்துச் செல்வது போல, உச்சி மலையை நோக்கி உற்சாகமாய்ச் செல்கிறது பக்த ஜனம்; அது தான், சித்தர்களும், பக்தர்களும் தென் கயிலையைத் தேடிவரும் சித்ரா பவுர்ணமி தினம்.

'எழில் வளர் கொங்கு நாட்டில் தக்கமேற்றிசையின் எல்லை முடிவினில் தயங்கா நிற்கும்' என்று பேரூர்ப்புராணத்தில் பாடப்படும் தென் கயிலை என்ற தட்சிண கயிலை வெள்ளியங்கிரி மலையின் சிறப்பு, அதையும் விட உயரமானது. சுயம்புவாய் ஈசன் வீற்றிருக்கும் இந்த உச்சி மலைக்கு, ஆண்டு முழுவதும் செல்வது சாத்தியமில்லாதது. அதனால் தான், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில், ஒரே இரவில் ஒரு லட்சம் பக்தர்கள், மலையேறும் ஆன்மிக அதிசயம் அமைதியாய் நிகழ்கிறது.

கோவையிலிருந்து 35 கி.மீ., துாரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது வெள்ளியங்கிரி மலை. அதன் அடிவாரத்தில் துவங்கி, ஏழு மலைகளைக் கடந்து, ஐந்தரை கி.மீ., துாரத்தில், ஆறாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது கிரி மலை. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், மலை ஏறுவது வழக்கம். கடுங்குளிர், வழுக்கும் பாறைகள், வன விலங்குகள் நடமாட்டம் என, இந்த மலைப்பயணம், பல சவால்களைச் சந்திக்கக் கூடியது.

ஆனால், ஒவ்வொரு மலையைக் கடக்கும்போதும், ஓய்வெடுக்க வேண்டுமென்ற உணர்வை விட, உற்சாகத்தோடு வேகமாய் ஏறத் துாண்டுவதே, இந்த ஆன்மிகப்பயணத்தின் அற்புதம். வழியில் பல நீர்ச்சுனைகளில் தீர்த்தம் அருந்தி, புல்வெளியிலும், பாறையிலும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, உறவுகளோடும், நட்போடும் விடிய விடிய மலையேறுவது என்பது, வேறெங்கும் கிடைக்காத பரவசமூட்டும் பக்தி அனுபவமாகும்.

பிப்.,1ல் துவங்கி, மே 31 வரையிலான நான்கு மாதங்களுக்கு மட்டுமே, இந்த மலைக்குச் செல்ல, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சித்ரா பவுர்ணமியை ஒட்டிய இரு நாட்களில் மட்டும், இரண்டு லட்சம் பக்தர்கள், கிரி மலை ஏறுவர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், இங்கு வரும் பக்தர்களை வைத்து, பல விதங்களிலும் பணம் பண்ணும் வியாபாரம் நடந்து வந்தது.

கிரி மலையில் உண்டியல் வைக்கும் உரிமத்தை எடுப்போர், திருநீர், கற்பூரம், பூ, கயிறு, எலுமிச்சம்பழம், தேங்காய் என சகலமும் அநியாய விலைக்கு விற்றனர். தனி வரிசைக்கு ஐநுாறு, ஆயிரம் என பக்தியை, பணம் பண்ணும் வித்தையாக மாற்றியிருந்தனர். வரும் வழியெங்கும் கடைகள் விரிக்கப்பட்டதால், பாலித்தீன் குப்பைகள் குவிந்து, இளங்காற்று வீசும் அந்த மலையை மூச்சுத் திணற வைத்தன.

இதற்கு முடிவு கட்டும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, சிவ பக்தர்கள் அமைப்பு, கிரி மலையில் உண்டியல் வைக்கும் உரிமையைப் பெற்று, அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்த ஆண்டிலும், அதே அமைப்பு, இந்த ஆன்மிகப் பணியை மேற்கொள்வதால், பக்தர்கள் மனமகிழ்வோடு மலையேறலாம். மறக்கக்கூடாத ஒரே விஷயம், இறைவனைத் தரிசிக்கும் இந்த இனிய ஆன்மிக அனுபவத்தில், இயற்கையையும் நேசித்து, அதைப்பாதுகாக்க வேண்டுமென்பது தான்.

-நமது நிருபர்-

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...