Sunday, October 1, 2017

முடி வெட்ட கட்டணம் ரூ.35: பாளை சிறையில் அசத்தல்
பதிவு செய்த நாள்30செப்
2017
19:27



திருநெல்வேலி, பாளை மத்திய சிறையில் திறக்கப்பட்ட முடி திருத்தும் நிலையத்தில், பெரியவர்களுக்கு முடி வெட்ட, 35 ரூபாயும், சிறுவர்களுக்கு, 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகள் என, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 

மத்திய சிறைகளிலும், 'சிறை அங்காடி' என்ற பெயரில், கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.இதன்படி, சிறை வளாகத்தில், காய்கறி தோட்டங்கள், ஹாலோ பிளாக் செங்கல் தயாரிப்பு, தையல் கூடம், முடி திருத்தும் நிலையம், சலவை நிலையம், உணவு விடுதிகள் அமைக்கப்பட்டன. இவற்றை, நன்னடத்தை கைதிகள் பராமரித்து வந்தனர்.

பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிறை அங்காடிகள், சில மாதங்களுக்கு முன், நிர்வாக குளறு படிகளால் மூடப்பட்டன. சிறை துறை, ஏ.டி.ஜி.பி.,யாக சைலேந்திர பாபு பொறுப்பேற்றதும், கடந்த மாதம், மத்திய சிறைகளில், மீண்டும், சிறை அங்காடிகள் திறக்கப்பட்டன.

இதன்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள முடி திருத்தும் நிலையத்தில், முடி வெட்ட, பெரியவர்களுக்கு, 35, ஷேவிங், 20, டை அடிக்க 50, கட்டிங், ஷேவிங், டை அடிக்க சேர்த்து, 100 ரூபாய் மட்டுமே
வசூலிக்கப்படுகிறது. வெளியில் உள்ள முடி திருத்தும் நிலையங்களில், 200 முதல், 250 ரூபாய் வரை கட்டணம் வாங்குகின்றனர். இங்கு, சிறுவர்களுக்கு கட்டிங் செய்ய, 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.இது குறித்து, பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:பாளை மத்திய சிறையில், 30க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் உள்ளனர். இவர்கள் இங்குள்ள காய்கறி தோட்ட பராமரிப்பு, கறவை மாடுகள் பராமரிப்பு, முடி திருத்தும் நிலையம், சலவை நிலையம், தையல் தொழில் பயிற்சி நிலையம், ஹாலோ பிளாக் செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலை தயிராக்கி, 'லஸ்ஸி' விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறை வளாகத்தில் உள்ள உணவகத்தில் காலையில், இட்லி, பூரி, பொங்கல் கிடைக்கும். மதியம் சிக்கன் பிரியாணி, 80 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுகின்றனர். 

இங்கு கைதிகளால் தைக்கப்படும் காட்டன் ரெடிமேட் சட்டைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...