Sunday, December 23, 2018

ஏடிஎம் எந்திரத்தில் அனாதரவாக இருந்த ரூ.59,800 ரொக்கப்பணம்: காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் வெகுமதி

Published : 22 Dec 2018 20:22 IST



வெகுமதி அளிக்கும் காவல் ஆணையர்

அயனாவரம் பகுதியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த பணம் ரூ.59,800/- நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய நபரை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை கே.கே.நகர் 103வது தெரு, 14-வது செக்டரில் வசித்து வரும் செந்தில் (45). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். செந்தில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் பணம் செலுத்துவதற்காக, அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை, சயானி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் சென்டருக்கு சென்றுள்ளார்.

பணத்தை செலுத்துவதற்காக அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் அருகே சென்றபோது அந்த எந்திரத்திலிருந்து 2000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் வெளி வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்தப்பணத்தை சேகரித்து எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.59,800 ரொக்கப்பணம் இருந்துள்ளது.

சுற்றுமுற்றும் பணம் போட்ட யாராவது இருக்கிறார்களா என பார்த்துள்ளார். ஆனால் யாரும் இல்லை. உடனடியாக செந்தில் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு அயனாவரம் காவல் நிலையத்திற்கு சென்று விபரத்தைக்கூறி ஒப்படைத்துள்ளார். பணத்தை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தினர். ஆய்வாளர் தளவாய்சாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்த சுகுமார் (49) என்பவர் தனது உறவினருக்கு பணம் செலுத்துவதற்காக 59,800 ரூபாய் ரொக்கப் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் வைத்து முழுமையாக ஆபரேட் செய்யாமல் விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மேற்படி பணத்தை தவறவிட்டுச் சென்ற சுகுமாரை அழைத்து, விசாரணை செய்த போலீஸார், வங்கி நிர்வாகத்தினரிடம் அதை உறுதி செய்தபின்னர் மேற்படி பணத்தை சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளர் தவறுதலாக விட்டுச்சென்ற பணம் ரூ.59,800/-ஐ நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் ஒப்படைக்க உதவிய தனியார் நிறுவன ஊழியர் செந்திலின் நேர்மையை அறிந்த, சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், செந்திலை இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...