Monday, December 10, 2018

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு: லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published : 10 Dec 2018 18:03 IST

லண்டன்




இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று லண்டன் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகளில் கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியது.

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதித் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீ ரென்று தான் வாங்கிய கடனை 100 சதவீதம் வட்டியில்லாமல் திருப்பித் தருவதாகவும், அரசும் வங்கிகளும் தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிமன்றத்துக்கு வந்த விஜய் மல்லையா வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்திய வங்கிளுக்கு செலுத்த வேண்டிய தொகையை திருப்பித் தர தயாராக இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்த தடையும் இல்லை என வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவு விரைவில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பிரிட்டன் அரசு முடிவெடுக்கும்.

இதையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. எனினும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே அவர் இந்தியா அழைத்து வரப்பட்டால் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அவரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024