Saturday, September 16, 2017

வெட்கித் தலைகுனிவோம்!


By ஆசிரியர்  |   Published on : 14th September 2017 01:26 AM  |
ஒருபுறம் உலகக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இந்தியர்கள் பலர். இன்னொருபுறம் வறுமையின் பிடியில் சிக்கி, இருக்க இடமில்லாமல் தெருவோரங்களில் அகதிகளாய் லட்சக்கணக்கானோர். ஒருபுறம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். இன்னொருபுறம் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அப்படியானால், இந்தியாவின் வளர்ச்சி என்பது நிஜமா அல்லது தோற்றமா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் மனித மலத்தை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது கிடையாது. பொலிவுறு நகரங்கள் குறித்தும், தூய்மை இந்தியா குறித்தும் நாம் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவின் பல பாகங்களில் மலம் அள்ளும் பணியில் இன்னும் பலர் ஈடுபடுகின்றனர் என்கிற வெட்கத்துக்குரிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.
மனித மலம் அள்ளும் தொழிலாளர்களை நாம் இன்னும் முழுமையாக அகற்றிவிடவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, குறைந்தது 1,82,505 பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 7,40,078 வீடுகளில் இன்னும்கூட மனிதர்கள் மலம் அள்ளும் விதத்திலான 'உலர் கழிப்பறை' கழிப்பறைகள்தான் காணப்படுகின்றன. 1993-இல் உலர் கழிப்பறைகளில் மலத்தை மனிதர்கள் சுத்தம் செய்யும் வழக்கத்துக்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றப்பட்டும்கூட, இந்த அநாகரிகத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை. 
1993-இல் இயற்றப்பட்ட சட்டம், 2013-இல் சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் பழக்கத்துக்கும் தடை பிறப்பிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும்கூட பல மாநிலங்கள் இந்தச் சட்டத்தை பின்பற்றுவதில்லை என்பதற்கு வன்மையான கண்டனத்தை மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்திருக்கிறார். 
இதுகுறித்து திடீர் விழிப்புணர்வு வருவதற்கு, கடந்த மாதம் தில்லியில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் விஷவாயு தாக்கி மரணப்பட்டதுதான் காரணம். ஊராட்சி, நகராட்சி அமைப்புகளின் அக்கறையின்மையும் சமுதாயத்தில் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும் சமூக வழிமுறைகளும் இதுபோன்ற மரணங்களுக்கு வழிகோலுகின்றன. மனிதாபிமானமற்ற முறையில் சக மனிதனை நடத்துகிறோம் என்கிற குற்ற உணர்வே இல்லாமல் நாம் இருப்பதன் அடையாளம் இது என்றும் கூற வேண்டும்.
ஊராட்சி, நகராட்சி அமைப்புகள் சாக்கடை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை முறையாக அடையாளம் காணவில்லை என்பதும், சாக்கடைத் துப்புரவுப் பணியின்போது இறந்தவர்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பதும், மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து முனைப்பு காட்டாமல் இருப்பதால்தான் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 22 மாநிலங்கள் மனித மலம் அள்ளுபவர்கள், சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்கள் குறித்த எல்லா தகவல்களையும் மறைத்துவிட்டிருக்கின்றன. அதனால் அந்தத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இழப்பீடு உதவி தரவோ, வேறு உதவிகளைச் செய்யவோ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மலக்கழிவை அகற்றும் பணியாளர்களுக்கும் சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்களுக்கும் மறுவாழ்வு அளிப்பதற்கான திட்டமொன்றை மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசுகளிடம் அழுத்தம் கொடுத்து அவர்களிடமிருந்து இவர்கள் குறித்த தகவல்களை கேட்டு வாங்காதது மட்டுமே மத்திய அரசின் தவறு என்று கருதிவிட வேண்டாம். மனிதகுலத்துக்கே இழிவை ஏற்படுத்தும் இந்த வழிமுறையை அகற்றுவதில் மத்திய அரசும் முனைப்புக் காட்டாமல் இருந்துவருகிறது என்பதுதான் உண்மை.
இவர்களின் மறுவாழ்வுக்காக 2013-14 நிதியாண்டில் ரூ.557 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டில் அது வெறும் ஐந்து கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறதே, அப்படியானால் இந்தியாவில் மனித மலம் அள்ளுபவர்களும், சாக்கடைகளில் இறங்கி பணியாற்றுபவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று பொருளா? எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் இந்த சமுதாய இழிவை அகற்றுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைத்தான் துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது எடுத்துக்காட்டுகிறது.
தூய்மை இந்தியா திட்டம், மனித மலம் அள்ளுபவர்கள் குறித்தோ, சாக்கடையில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் குறித்தோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை. தூய்மை இந்தியா திட்ட முனைப்பு முழுக்க முழுக்க வெட்டவெளியில் மலம் கழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத்தான் இருக்கிறது. எங்கெல்லாம் கழிப்பறைகள் இல்லையோ அங்கெல்லாம் நவீனக் கழிப்பறைகள் கட்டுவது என்பதிலும், மக்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதை பழக்கப்படுத்துவது என்பதிலும்தான் முனைப்பு காட்டுகிறது. மனிதர்கள் மூலம் அள்ளப்படும் ஏறத்தாழ 26 லட்சம் உலர் கழிப்பறைகள் குறித்து தூய்மை இந்தியா திட்டம் கவலைப்படவில்லை. முதலில் அந்தக் கழிப்பறைகளை, நவீனக் கழிப்பறைகளாக மாற்றுவதற்கான திட்டத்தை அல்லவா அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.
காலங்காலமாக இருந்துவரும் இந்தக் கொடுமைக்கு சட்டத்தின் மூலம் மட்டுமே முடிவு கட்டிவிட முடியாதுதான். ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வும் ஒட்டுமொத்த மனித இனத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்கிற உறுதியும் இருந்தால் மட்டும்தான் இந்தக் கொடுமை தீரும். அது தீராதவரை இந்தியா உலகின் வல்லரசே ஆனாலும் அதில் பெருமையில்லை!

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...