Wednesday, September 27, 2017

தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநராக எட்வின் ஜோ தற்காலிகமாகத் தொடர நீதிமன்றம் உத்தரவு
அருண் சின்னதுரை





ரேவதி கயிலைராஜனை தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநராக நியமிக்கக்கோரிய தனிநீதிபதி உத்தரவை ரத்துசெய்யக் கோரி அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் மருத்துவர் ரேவதி கயிலைராஜன். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக உள்ளார். இந்நிலையில், இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அம்மனுவில், "மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்துக்கு வேலைசெய்யும் சீனியாரிட்டி அடிப்படையிலும், குறிப்பிட்ட கால அளவு டீனாகவும் பணியாற்றியிருக்க வேண்டும். இதுபோன்ற குறிப்பிட்ட விதிகளுக்குப் புறம்பாக, தமக்கு வேண்டியவர்களை நியமிக்கும் வகையில் விதிகளைத் தளர்வு செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது என்னைவிட பணி மூப்பு குறைவான டாக்டர் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது விதிக்கு முற்றிலும் மாறானது. எனவே, பணி மூப்பு மற்றும் டீனாகப் பணிபுரிந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் என்னை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த மதுரைக்கிளை நீதிபதி கடந்த 20-ம் தேதி, "எட்வின் ஜோ நியமனம் விதிப்படி நடைபெறவில்லை. எனவே, மருத்துவக் கல்வி இயக்குநராக ரேவதி கயிலைராஜனை உடனடியாக மருத்துவ கல்வி இயக்குநராக நியமித்து சுகாதாரத்துறைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனிநீதிபதியின் இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி, தமிழக அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுந்தர் அடங்கிய அமர்வு, வழக்கில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, இதுகுறித்து ரேவதி கயிலை ராஜன் பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024