Wednesday, September 27, 2017

யாரை விசாரிக்க இந்த கமிஷன்? ஜெயலலிதா மரணமும்... தீராத சந்தேகங்களும்..!

vikatan

ச.ஜெ.ரவி




தமிழகத்தில் சில விஷயங்கள் சாதாரண மக்களுக்குத் தெரிவதில்லை. புரிவதுமில்லை. அப்படி ஒரு விஷயமாக மாறியுள்ளது ஜெயலலிதா மரணம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது ஆதரவாளர்கள் யாரும், அவர் திரும்பி வரமாட்டார் என அறிந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் 'ஜெயலலிதா திரும்பமாட்டார்' என தகவல் வெளியாக அதைக்கூட அவர்கள் நம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா என்ற ஆளுமை. ஜெயலலிதாவை மிகவும் நேசித்தவர்கள், அவர் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினார்கள். அதனால் அதையே நம்பினார்கள்.

இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது அது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவர் குறித்து சொல்லப்பட்ட தகவல்கள். இதுவே, ஜெயலலிதா இறந்தபோது மக்கள் பலருக்கு அவரது மரணத்தில் சந்தேகம் எழவும் காரணமாக இருந்தது. சாதாரணக் காய்ச்சல் எனச்சொல்லி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாள்கள் நீண்டு கொண்டேபோனபோது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது; தேர்தல் ஆணைய படிவத்தில் கையெழுத்துக்குப் பதிலாக ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்டிருந்தது; அரசியல் தலைவர்கள் துவங்கி யாரும் ஜெயலலிதா தங்கிய அறைக்கு அருகில் கூட அனுமதிக்கப்படாதது போன்றவை சந்தேகத்தை வலுப்படுத்தியது. கட்சித் தலைவர்கள், ஆளுநர், ஊடகங்கள் என யாருக்கும் திறக்காத அப்போலோ கதவுகளுக்குப் பின்னால் என்னதான் நடந்திருக்கும் சந்தேகம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.



ஆனால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தது ஆளும் தரப்பு. அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதா உடல்நலம் பற்றி கருத்துச் சொல்லவில்லை. அ.தி.மு.க. சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே பேசினார்கள். 'அம்மா இட்லி சாப்பிட்டார்; டி,வி.பார்க்கிறார்; நலமுடன் இருக்கிறார்; எங்களுக்கு இனிப்பு கொடுத்தார்' என அப்போது வெளியான தகவல்களை செய்தித் தொடர்பாளர்களே சொன்னார்கள்.

ஜெயலலிதா ஆன்மா உந்தியதாகச்சொல்லி 'தர்மயுத்தம்' துவங்கிய பன்னீர்செல்வம் அப்போது முதல்வரின் இலாகாக்களை தன்வசம் வைத்திருந்தவர். அவர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எதுவும் பேசவில்லை. ஜெயலலிதா உயிரிழந்த நாளில், அவசர அவசரமாக பொறுப்பேற்றுக்கொண்டபோதும், அதன் பின்னர் சில நாள்கள் முதல்வர் பதவியை தன் வசம் தக்கவைத்திருந்தபோதும் அவர் இதை உணர்ந்திருந்தாரா என்பது தெரியவில்லை.

இப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி விசாரணை கமிஷன் அமைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மருத்துவமனையில் இறந்தபோது முக்கிய அமைச்சராக இருந்தவர். அப்போது இவர் எதுவும் சொல்லிவிடவில்லை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லப்பட்டபோது, இவர் கடுமையாக மறுத்தார். பிரிந்த பன்னீர்செல்வம் அணி சேர நிபந்தனை விதிக்கப்பட... இப்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச்சொல்லி விசாரணைக் கமிஷன் அமைத்திருக்கிறார்.



ஜெயலலிதா மரணம் குறித்த பரபரப்பான தகவல்களை வெளியிடுபவர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இவர் கருத்து ஏதும் சொல்லிவிடவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியபோதுதான் இவர் கருத்துச் சொல்லத் துவங்கினார். 'மருத்துவமனையில் நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்தோம்; அவர் டை அடிக்காமல் நரைத்த முடியுடன் இருந்ததால் அந்தப் படங்களை வெளியிட முடியவில்லை; ஜெயலலிதா எங்களை அழைத்து சந்தித்தார்; எங்களுக்கு ஸ்வீட் கொடுத்தார்; டி.வி. பார்த்தார்' என இவர் சொன்ன தகவல்கள் எல்லாம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நாள்கள் நகர்ந்தன. இப்போது அணிகள் இணைப்புக்குப் பின்னர் இவர் சொல்லும் தகவல் தான் பகீர் ரகம். 'ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், இனிப்பு கொடுத்தார், எங்களோடு பேசினார் என நான் சொன்னது எல்லாம் பொய். நாங்கள் யாருமே சந்திக்கவே இல்லை. எங்களை அனுமதிக்கவுமில்லை. பொய் சொன்னதற்கு எங்களை மன்னித்து விடுங்கள். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருக்கிறது," எனச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மறுபுறம் 'நானும் பிற அமைச்சர்களும் அம்மாவை சந்தித்தோம்' செல்லூர் ராஜூ பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.



அடுத்து முன்னாள் அமைச்சர் பொன்னையன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை குறித்த அதிகத் தகவல்களை பகிர்ந்துகொண்டது பொன்னையன்தான். "ஜெயலலிதா சுபிக்‌ஷமாக இருக்கிறார். நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் அபரிவிதமான முன்னேற்றம் இருந்து வருகிறது. மிகச்சிறப்பான சிகிச்சை கொடுக்கிறார்கள். மிக விரைவில் வீடு திரும்பி கட்சி, ஆட்சிப்பணிகளை கவனிப்பார்," என தொடர்ச்சியாகப் பேட்டிக்கொடுத்தவர் பொன்னையன். 

அவர் இப்போது சொல்வது அதற்கு நேரெதிர் குற்றச்சாட்டுகள். "ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே 60 சதவிகிதம் உடல்நிலை மோசமடைந்திருந்தது. 40 சதவிகிதம்தான் நன்றாக இருந்தது. அந்த நிலையில் இருந்து ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதை அரசு சொல்ல வேண்டும். மருத்துவமனைக்கு வரும் முன்னர் அவர் எங்கே சிகிச்சை பெற்றார். யார் தவறு செய்தார்கள்? அவரது உடல்நிலை குறித்து, உண்மை வாரிசுகளான பொறுப்பாளர்களுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். அவருக்கு சிகிச்சை சரியாக கொடுக்கப்படவில்லை. அவரது உடல்நிலை மோசமடைய அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள்தான் முக்கிய காரணம்," என குற்றஞ்சாட்டி வருகிறார்.



பதவியை இழக்கும் வரை பன்னீர்செல்வம் இதைச் சொல்லவில்லை. பதவிக்கு ஆபத்து வரும்வரை எடப்பாடி பழனிசாமி இதைச் செய்யவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக பன்னீர்செல்வம் சொன்னதை அன்று மறுத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பன்னீர்செல்வம் அணியோடு இணைந்த பின்னர், மறுத்ததை மறுக்கிறார். அன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை வியந்து பாராட்டிய பொன்னையன், சிகிச்சையின் அடிப்படையே தவறு என இப்போது சொல்கிறார். 'சத்தியமிட்டுச் சொல்கிறேன் அம்மா நலமாக இருக்கிறார்' எனச்சொன்னவர், 'அம்மாவை நாங்கள் சந்திக்கவேயில்லை. இன்று சொல்வது தான் உண்மை' என மீண்டும் சத்தியம் செய்கிறார். இவை போதாது என்று, அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின்னர் சசிகலாவே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்கிறார் டி.டி.வி. தினகரன். 'வீடியோ ஆதாரம் இருக்கிறது. சசிகலாவே வீடியோ எடுத்தார். உரிய நேரம் வரும்போது, வெளியிட தயாராகவே இருக்கிறேன்' என்கிறார் அவர்.

முதல்வர் பதவியை இழக்காவிடில் பன்னீர்செல்வம் இதைச்சொல்லி இருப்பாரா? அணி பிரிந்து பதவிக்கு ஆபத்து வராமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி இதைச் செய்திருப்பாரா? இவை இரண்டும் நடக்காமல் இருந்திருந்தால் திண்டுக்கல் சீனிவாசன் முன்னர் ஒன்றும், பின்னர் அதை மாற்றியும் பேசியிருப்பாரா என ஏராளமான கேள்விகள் நமக்குள் எழுந்தபடியே இருக்கின்றன. ஆளுநர் வந்து யாரைப்பார்த்தார்? உள்துறை அமைச்சர் யாரைப் பார்த்து பேசிவிட்டுச் சென்றார். பிரதமர் ஆலோசனையின் பேரில் வந்ததாகச் சொல்லப்படும் எய்ம்ஸ் மருத்துவர்கள் என்ன செய்தார்கள்? என ஏகப்பட்ட கேள்விகள் குவிந்து கிடக்கிறது.



இப்போது இதற்கெல்லாம் விடைகொடுக்க விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது அரசு. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இத்தனை சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தக் குழு யாரை விசாரிக்கப்போகிறது? ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது அவரது இல்லமான போயஸ் கார்டனில் அல்ல. அப்போலோ என்ற பிரபலமான மருத்துவமனையில். வெளிநாட்டு மருத்துவர்கள் வந்தார்கள். டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள். மருத்துவமனையில் காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சரும், இன்னபிற அமைச்சர்களும் வந்து விசாரித்துச் சென்றார்கள். ஜெயலலிதா பெயரிலேயே அறிக்கையும் வெளியானது. தேர்தல் ஆணைய படிவமொன்றில் ஜெயலலிதா தன் கைரேகையை பதிவு செய்திருந்தார். இதில் எது உண்மை, எது பொய்?

இதைக் கட்டாயம் விசாரிக்க வேண்டும். மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், இப்போது யாரை இந்த ஆணையம் விசாரிக்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024