Friday, September 29, 2017

தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.1.55 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பதிவு செய்த நாள்29செப்
2017
01:25

சென்னை: தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை, 1.55 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஸ்ரீதேவி தாக்கல் செய்த மனு: என் மகள் நித்யஸ்ரீ, நேரு விளையாட்டரங்கில் விளையாடியபோது, சறுக்கி விழுந்ததால், இடது கை எலும்பு முறிந்தது. சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய், மருத்துவ செலவு ஆனது.
'உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; சில நாட்களில் சரியாகிவிடும்' என, மருத்துவர்கள் தெரிவித்து, நித்யஸ்ரீயை, 'டிஸ்சார்ஜ்' செய்தனர்.
ஆனால், தவறான சிகிச்சையால், வீக்கம், வலி குறையவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளானோம். மருத்துவ செலவுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையில், 'பாதிப்பிற்கு, சிகிச்சை பெற்றவரின் கவனக்குறைவே காரணம். சிகிச்சைக்கு பின், கையை கவனமாக வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகம் வாதிட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மருத்துவமனை சேவையில் குறைபாடு உள்ளது. பாதிப்படைந்த மனுதாரருக்கு, மருத்துவ செலவு தொகை, ஒரு லட்சம் ரூபாயுடன், சேவை குறைபாட்டிற்கு, 25 ஆயிரம் ரூபாயும், இழப்பீடு, 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு, செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 1.55 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தர விடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024