Thursday, September 28, 2017

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று ஓய்வு
By DIN | Published on : 28th September 2017 01:31 AM |



முன்னாள் தலைமைச் செயலாளரும், தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநருமான ராம மோகன ராவ் அரசுப் பணியிலிருந்து வியாழக்கிழமை (செப். 28) ஓய்வு பெறுகிறார்.

1985-ஆம் ஆண்டு பிரிவு: ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட ராம மோகன ராவ், கடந்த 1957 செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்தவர். 1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது செயலாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளும் அவர் அந்தப் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல், முதல்வரின் முதல் செயலாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

சோதனை-சர்ச்சை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதனால் எழுந்த சர்ச்சையால் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டார். மேலும், அவருக்குப் பணி அளிக்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார்.

மீண்டும் பணி: இந்த நிலையில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் 60 வயதை அவர் பூர்த்தி செய்வதால் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். வியாழக்கிழமை (செப்.28) அவரது கடைசி அலுவலக நாளாகும். வெள்ளி, சனி ஆகிய தினங்கள் அரசு விடுமுறை என்பதால், வியாழக்கிழமை மாலை அரசுப் பணியிலிருந்து அவர் ஓய்வு பெறுகிறார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...