Friday, September 29, 2017

சிறப்பு பஸ்கள் இயக்குவதில் தொழில் நகரங்கள் புறக்கணிப்பு
பதிவு செய்த நாள்
செப் 29,2017 02:02



சேலம்: சரஸ்வதி பூஜை, தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவதில், தொழில் நகரங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது, தென் மாவட்ட மக்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க, முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

தற்போது, வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பஸ்களும், சென்னையில் இருந்து இயக்குவதற்காக, திருப்பி விடப்பட்டுள்ளன. பெங்களூரில் இருந்து, சேலம் மார்க்கமாக, தென் மாவட்டங்களுக்கு, 42 விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 22 பஸ்களின் முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சென்னைக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. மீதமுள்ள, 26 பஸ்களின் முன்பதிவு அனைத்தும், செப்., 27 துவங்கி, அக்., 2 வரை முடிந்துவிட்டன. நேற்று முன்தினம், தென் மாவட்டங்களுக்கு சென்ற முன்பதிவு செய்யாத பயணியர், வேறு வழியின்றி, நின்று கொண்டும், பஸ்சின் உள்ளே உள்ள வழித்தடத்தில் உட்கார்ந்தும் சென்றனர். இதே நிலை, தீபாவளி பண்டிகையின் போதும் தொடரும் என்பதால், தென் மாவட்ட பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வி.வி.ஐ.பி.,க்கள் கவனம் திரும்புமா? :

திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில், மளிகை கடை உட்பட பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பண்டிகை நேரத்தில் கூட, நிம்மதியாக சொந்த ஊர் சென்று வர முடியவில்லை. தமிழகத்தின் தற்போதைய, வி.வி.ஐ.பி.,க்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் ஆகியோர், சிறப்பு பஸ்கள்இயக்குவதில், தொழில் நகரங்களுக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024