Thursday, September 28, 2017

இறந்தவர் உடலை மாற்றி எடுத்து சென்று தகனம் : கோவை அரசு மருத்துவமனையில் குழப்பம்
பதிவு செய்த நாள்28செப்
2017
02:28

கோவை: கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து, சடலத்தை மாற்றி எடுத்துச் சென்று தகனம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், பெரியாயிபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி, 55, கடந்த, 25ம் தேதி விபத்தில் சிக்கினார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலம், பிணவறையில் வைக்கப்பட்டது.இதேபோன்று, துடியலுாரை சேர்ந்த, கோபால், 52, என்பவர், சூலுாரில் நடந்த விபத்தில் சிக்கி, உயிரிழந்தார். இவரது சடலமும், பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் மட்டும், கோவை அரசு மருத்துவமனை பிணவறையில், பிரதே பரிசோதனைக்காக, 15 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன; பிரதே பரிசோதனை செய்யப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.அமரர் ஊர்தி வாகனங்கள் தாமதமானதால், சடலங்கள் பிணவறை கூடத்துக்கு வெளியே, வைக்கப்பட்டிருந்தன. அப்போது வந்த ஒரு அமரர் ஊர்தியில், துடியலுாரை சேர்ந்த கோபால் சடலம் என்று நினைத்து அவரது உறவினர்கள், சுப்ரமணியின் சடலத்தை எடுத்து சென்றனர். அங்கு இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தனர்.இதற்கிடையே, மருத்துவமனையில் சுப்பிரமணியின் சடலத்தை எடுத்துச் செல்ல வந்த அவரது உறவினர்கள், உடல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், கோபாலின் உறவினர்கள் சுப்ரமணி சடலத்தை மாற்றி எடுத்து சென்றது தெரியவந்தது.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுப்ரமணி உறவினர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் போலீசார், இருதரப்பு உறவினர்களுடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து கோபாலின் சடலமும், துடியலுாரில் தகனம் செய்யப்பட்டது. பின், இருவரது அஸ்தியும் அவரவர் உறவினர்கள் பெற்று சென்றனர்.

சடலம் மாறியது எப்படி: கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேலு கூறியதாவது:சம்பந்தப்பட்ட இருவரும், விபத்தில் இறந்தவர்கள். விபத்தில் முகம் சிதைந்து போனதால், உடல்கள் மாறிவிட்டன. இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.மொத்தம், 10 அமரர் ஊர்திகள் உள்ளன. இதில், நான்கு வண்டிகள் பணிமனைக்கு சென்றுள்ளதால், ஆறு வண்டிகள் மூலம், சடலங்களை அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024