Saturday, September 30, 2017

தீபாவளி இனாம் கேட்கக்கூடாது என காஸ் சிலிண்டர் ஊழியர்களுக்கு டி.எஸ்.ஓ., எச்சரிக்கை
பதிவு செய்த நாள்
செப் 30,2017 00:19


மதுரை;''காஸ் சப்ளை செய்யும் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்கக்கூடாது. கேட்பதாக புகார் வந்தால் அவர்கள் மீதும், ஏஜன்சி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மதுரையில் நடந்த எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர்(டி.எஸ்.ஓ.,) பொன்ராமர் எச்சரித்தார்.எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் நடந்த விவாதங்கள்:சிதம்பரம்: சிலிண்டர்களுக்கான மானியம் முறையாக வங்கிகளில் செலுத்தப்படுவதில்லை. சிலிண்டர் வினியோக ஊழியர்கள் எடைமிஷின் கொண்டு வருவதும் இல்லை. கடந்த கூட்டங்களில் இப்பிரச்னைகளை சுட்டிகாட்டியும் நடவடிக்கை இல்லை.கோமதிநாயகம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஏஜன்சி சிலிண்டர்களுக்கு மானியம் ஆறு மாதங்களாக சில நுகர்வோருக்கு செலுத்தப்படவில்லை. எஸ்.எம்.எஸ்.,ம் வருவதில்லை. ஏஜன்சிகளிடம் முறையிட்டாலும் நடவடிக்கை இல்லை.

ஆர்தர்: ஐ.வி.ஆர்.எஸ்., முறையில் சிலிண்டர் புக் செய்ய காஸ் ஏஜன்சி, எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. இதில் பதிவு செய்யும் போது தவறுதலாக எண்களை அழுத்தி விட்டால் மானியம் ரத்தாகி விடுகிறது.சந்திரசேகர்: சிலிண்டர் லீக்கேஜ் போன்ற பிரச்னைகளால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.
ஜெயனேசன்: சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் 50 ரூபாய் வசூலிக்கின்றனர். கொடுக்க மறுத்தால் சிலிண்டர் சப்ளை செய்ய தாமதிக்கின்றனர். எந்த காஸ் ஏஜன்சி ஊழியர்களும் அடையாள அட்டை அணிவதில்லை. புகார் குறித்து போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை.வழங்கல் அலுவலர்: எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.யோகானந்தம்: சில ஏஜன்சி நிறுவனத்தினர் பொது மக்கள் நடமாடும் இடங்களில் குடோன் அமைத்துள்ளனர். விபத்து அபாயம் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.ஜெயபாலன்: செல்லுாரில் சில நாட்களுக்கு முன் லீக்கேஜ் ஆன சிலிண்டரை சப்ளை செய்தனர். உரிய நேரத்தில் கவனித்ததால் விபத்து 

தவிர்க்கப்பட்டது.எண்ணெய் நிறுவன அதிகாரிகள்: பழுதான சிலிண்டரை நுகர்வோருக்கு சப்ளை செய்யக்கூடாது; திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். எங்கு சப்ளை செய்யப்பட்டது என ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்புராம்: டூவீலர்களில் ஆறு சிலிண்டர்கள் வரை எடுத்துச்சென்று ஊழியர்கள் வினியோகிக்கின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் டூவீலர்களில் கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

ராஜேந்திரன்: சிலிண்டர் சப்ளை செய்ய வரும் ஊழியர்கள் 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். தற்போது தீபாவளி வருவதால் அதை சுட்டிகாட்டி கட்டாயப்படுத்துகின்றனர்.சண்முகவேலு: சிலிண்டர் விலைகளில் வித்தியாசம் உள்ளது. ஏஜன்சிகளுக்கு இடையே விலை வேறுபாடுள்ளது. ஒரே விலையில் விற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அசோகன்: நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து காஸ் சிலிண்டர் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள்: சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் எடை மிஷின் வைத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே அறிவுறுத்தி உள்ளது. எடைமிஷன் கொண்டு வராத ஊழியர்கள் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண் பதிவு செய்த வங்கிகள் மூலம் சிலிண்டர் மானியம் செலுத்தப்படுகிறது. மானியம் வராதபட்சத்தில் ஆதார், நுகர்வோர் எண்ணை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வழங்கல் அலுவலர்: காஸ் ஏஜன்சி நிறுவனத்தினர் ஊழியர்களிடம் கூடுதலாக 'டிப்ஸ்' வசூலிக்கக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும். எடைமிஷன் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் நலன்கருதி டூவீலரில் சிலிண்டர் கொண்டு செல்வதை ஏஜன்சிகள் தவிர்க்க வேண்டும். குறுகலான சந்து பகுதியாக இருந்தால் மினி லாரிகளில் கொண்டு சென்று சப்ளை செய்யலாம். ஊழியர்கள் அடையாள அட்டை அணிய கட்டாயப்படுத்த வேண்டும். தீபாவளி இனாம் கேட்டு நுகர்வோரை தொந்தரவு செய்யக்கூடாது. இதுபோன்ற புகார் வந்தால் காஸ் ஏஜன்சி மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...