Tuesday, September 26, 2017

அறிவோம்! தெளிவோம்! 91.6 என்றால் என்ன?


By தொகுப்பு: எம்.எஸ்.ஜி.  |   Published on : 26th September 2017 01:35 AM  |
gold

வழக்கமாக 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலைதான் எழுதி வைத்திருப்பார்கள். நியாயமான கடைகளில் 24 காரட், 22 காரட், 18 காரட் தங்கத்தின் விலையை எழுதி வைத்திருப்பார்கள். 10 கிராம் 24 காரட் விலை ரூ.23,000 என இருந்தால் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை அதில் 91.67 சதவீதமாக ரூ.21,068 ஆகத்தான் இருக்க வேண்டும். இதில் வேறுபாடு இருந்தால் உஷாராகுங்கள்.
சிலர் வரிக்கு பயந்து தங்க நகைக்கு ரசீது வாங்குவதை தவிர்ப்பார்கள். இது சில கடைக்காரர்களுக்கு சாதகமாக மாறும். அவர்கள் தரம் குறைந்த நகைகளை அதிக விலைக்கு விற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பலர் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மிகவும் அழுக்கடைந்த நிலையில் கடைக்கு கொண்டு செல்வார்கள். இது போன்றவற்றுக்கு அதிக சேதாரம் போடும் நிலை ஏற்படும். இதற்கு பதில் நாமே சோப்பு, பிரஷ் மூலம் சுத்தப்படுத்தி கொண்டு சென்றால் சேதாரம் குறைய வாய்ப்பு உள்ளது.
சில கடைகளில் சேதாரம், செய்கூலி இல்லாமல் விற்பனை செய்வதாக சொல்வார்கள். அந்தத் தங்கம் சுத்தத் தங்கமாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்தி வாங்க வேண்டியது நுகர்வோருக்கு நல்லது.
91.6 என்றால் என்ன?
தங்க நகைகளில் 91.6 என்பது ஒரு கிராம் தங்கத்தில் 91.6 சதவீதம் சுத்தமான 24 காரட் தங்கமும் மீதி 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி இருக்கும். 91.6 என்பதுதான் 22 காரட் தங்கம்.
சேதாரத்தை தவிர்க்க..!
கைகளால் செய்யப்படும் நகைகள் வலிமையாக இருக்கும். ஆனால், சேதாரம் கூடுதலாக இருக்கும். அதிக சேதாரத்தை தவிர்க்க நினைப்பவர்கள் மிஷின் கட்டிங் நகைகளை வாங்க முற்படலாம். ஆனால், மிஷின் கட்டிங் நகைககளில் பளபளப்பு சீக்கிரமே போய்விடும் அபாயம் உள்ளது.
சேதாரமே இல்லை என்று கூறும் கடைகளில் நகையின் விலை ஏற்றப்பட்டிருக்கும். அல்லது தரம் குறைவாக இருக்கும்...ஜாக்கிரதை. 
ஃபேஷன், ஆன்டிக் நகைகளில் செய்கூலி அதிகம். கூடுதல் விலை என்பதால் தவிர்ப்பது நல்லது. முதலீடு செய்ய நினைப்போர் தங்கக் கட்டிகளை வாங்கி வைக்கலாம்.
தங்கத்தின் 916 கே.டி.எம். (கேட்மியம்) உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை பார்த்து நகைகளை வாங்க வேண்டும்.
பராமரிப்பு!
தங்க நகையை புதிதாக வாங்கும் போது பளபளவென்று ஜொலிக்கும். அந்தப் பொலிவு எப்போதும் நீடிக்க நகையை முறையாகப் பராமரிப்பது அவசியம்.
பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊற வைத்துக் கழுவினால் அவை பளிச்சென்று இருக்கும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக் கொட்டையைப் பொடித்து தண்ணீரில் கலந்து, அதில் நகையை ஊற வைத்துக் கழுவி மென்மையான துணியால் துடைத்தால் நகைகள் பளபளவென இருக்கும். அதிக நாள்கள் நகைப் பெட்டியில் நகைகளை வைத்துவிட்டு கவனிக்காமல் இருந்துவிட்டால், நகை மீது சிகப்பு அல்லது பச்சை நிறம் படியக்கூடும். அதுபோன்ற நகைகளை அப்படியே அணிந்து கொள்ளாமல் சோப் நுரையில் அலசி போட்டுக் கொண்டால் ஜொலிக்கும்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அணிந்து சென்றுவிட்டு நகைகளை கழற்றி வைக்கும் முன் சோப்பு நுரையில் நன்கு அலச வேண்டும். மேலும் மென்மையான பருத்தி துணியால் துடைத்து வைத்தால் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
நகைப் பெட்டி இல்லாதவர்கள் நகைகளை மெல்லிதான பனியன் போன்ற பருத்தி துணியில் சுற்றி பீரோவில் பத்திரமாக வைக்கலாம். இதனால், நகைகளின் பளபளப்பு அப்படியே நீடிக்கும்.
கேடிஎம் என்றால் என்ன?
முன்பு எல்லாம் நகை செய்பவர்கள் நகையை பற்ற வைக்க பொடி என்று ஒரு கலவையை பயன்படுத்துவார்கள். தங்கம், வெள்ளி, செம்பு கலந்தது அந்தப் பொடி. இந்தப் பொடியை பயன்படுத்தி நகையை பற்ற வைக்கும் போது பொடியில் உள்ள செம்பு, வெள்ளி ஆகியவை நகையுடன் சேர்ந்து விடும். அதனால், தங்கத்தின் தரம் குறைந்து விடும். ஆனால் கேடிஎம் வந்த பிறகு அந்தப் பிரச்னை இல்லை. ஒரு கிராம் தங்கத்தில்100 மில்லி அளவில் கேடிஎம் சேர்த்தால் போதுமானது. இதைப் பயன்படுத்தி பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் கேடிஎம் மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான நகை மட்டுமே இருக்கும்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...