Monday, July 9, 2018

‘‘இன்று சாதனை நாள்’’ - தாய்லாந்து குகையில் இருந்து 6 சிறுவர்கள் மீட்பு: 15 நாள் போராட்டத்திற்குபின் அதிரடி ஆபரேஷன் வெற்றி

Published : 08 Jul 2018 18:24 IST

பாங்காக்



தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக 15 நாட்களுக்கு பிறகு மேற்கொண்ட அதிரடி ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளளது. முதல்கட்டமாக 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற சமயம் அங்கு திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறுமாக குகை சூழந்துள்ளதால் அவர்களால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்றி அவர்கள் குகைக்குள் சிக்கினர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அங்கு தற்போது பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டபோதிலும், மோசமான வானிலையால் அவர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் உள்ளே சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

அவர்களுக்கு ஆக்ஸிஜன் பெட்டியை எடுத்துச் சென்ற தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து உள்ளே இருப்பவர்களின் உயிருக்கு ஆபத்து இன்றி மீட்க பல ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

சிறுவர்கள் இருக்கும் பகுதியில் குகையின் மேல் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக அவர்களை தூக்குவது பற்றியும் ஆலோசனை நடந்தது. அதுபோலவே நீச்சலில் திறன் படைத்த கடற்படை வீரர்களை அனுப்பி சிறுவர்களை முதுகில் சுமந்து கொண்டு வரலாமா எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் மழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளை செய்யவதில் சிக்கல் ஏற்பட்டது. எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும், அந்த சிறுவர்களை உயிருடன் மீட்பது முக்கியம் என்பதால் அதிக கவனத்துடன் திட்டமிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் குகையில் சிறுவர்கள் சிக்கி 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் இனிமேலும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அதிரடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தாய்லாந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நீச்சல் வீரர்கள் களத்தில் இறங்கினர்.


சகதி கலந்த வெள்ள நீரில் நீந்தி சென்று, சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கி நீண்ட நேரம் ஆழ்கடலில் இருந்து அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளே சென்றனர். இந்த அதிரடி ஆபரேஷனில் ஆபத்து இருந்தாலும் வேறு வழியின்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி,

முதல் குழுவினர் உள்ளே சென்று இரண்டு சிறுவர்களை மீட்டு வந்தனர். கடும் போராட்டத்திற்கு இடையே சிறுவர்களை தோழில் சுமந்து கொண்டு வந்த அவர்கள் குகைக்கு வெளியே வந்தபோது அதிகாரிகள், உலகம் முழுவதும் இருந்து வந்த ஊடகவியலாளர்கள் என அனைவரும் பரவசத்துடன் அவர்களை வரவேற்றனர். மீட்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க அங்கேயே தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து அடுத்த குழுவினர் உள்ளே சென்று அடுத்தடுத்து சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீட்பு குழு அதிகாரி கூறுகையில் ‘‘15 நாட்கள் பொறுமை காத்தபோதிலும், இதன் பிறகும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தோம். அதனடிப்படையில் ஆபத்தை பற்றி பொருட்படுத்தாமல் இந்த அதிரடி முயற்சியில் ஈடபட்டோம். இன்று எங்களது சாதனை நாள்’’ எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...