Thursday, July 26, 2018

இனி ஆரஞ்சு சாப்பிட்டுட்டு கொட்டைய துப்பாதீங்க... அதுக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கு...


ஆரஞ்சு என்று சொன்னவுடன் அதன் புளிப்பு சுவை, அதன் நிறம் மற்றும் அதன் சாறு போன்றவை நம் நினைவுக்கு வரும். நம்மில் நிறைய பேருக்கு ஆரஞ்சின் சுவை மிகவும் பிடிக்கும். ஓரளவிற்கு விலை மலிவான பழங்களில் இதுவும் ஒன்று.

ஆகவே பல நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் உணவு அட்டவணையில் இந்த பழம் இடம்பெற்றிருக்கும். உடனடி ஆற்றலைத் தருவதால் அலுவலகம் செல்லும் பெண்களில் பலர் தங்கள் கைப்பையில் இதனை வைத்திருப்பதை நாம் பார்க்கலாம்.

ஆரஞ்சு பழம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரஞ்சு சுளையை உரித்து சாப்பிடுவதை இன்பமாக உணர்வார்கள். பழச் சாறாகவும், சாலட் போன்ற வடிவத்திலும் நாம் அன்றாடம் ஆரஞ்சு பழத்தை உட்கொண்டு வருகிறோம். ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளும் நாம் அதன் விதைகளை வீசி விடுகிறோம். இதன் விதை உங்கள் செரிமானப் பாதை வழியாக உடலுக்குள் செல்லும்போது, அது அப்படியே இருக்க உதவும் ஒரு கடினமான ஓடு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வடிவில் உள்ளது.

ஆரஞ்சு விதைகள்

ஆரஞ்சு பழத்தில் உள்ள நன்மைகள் ஒரு புறம் இருந்தாலும், இதன் விதைகளில் கூடுதல் நன்மைகள் உள்ளன. ஆம், ஆரஞ்சு விதைகளை நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே, இந்த சாறு நிறைந்த பழத்தை உட்கொள்ளும்போது, அதன் விதைகளை வீசி எறியாமல் ஒரு முறை இதன் நன்மைகளை நினைத்து பார்க்கவும். வாருங்கள் ஆரஞ்சு விதைகளின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சக்தி மிகுந்த அன்டி ஆக்சிடென்ட்

ஆரஞ்சு பழத்தைப் போல், இதன் விதைகளும் அன்டி ஆக்சிடென்ட்களின் ஆதாரமாக விளங்குகின்றன. இவை, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து, நீர்ச்சத்தை அளிக்கிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. காலையில் உடலுக்கு அன்டி ஆக்சிடென்ட் கிடைப்பதால் நாள் முழுக்க உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது. மேலும், அணுக்களை சேதமாக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராட உடலுக்கு சக்தியை தருவதால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிகிறது. நீங்கள் வீட்டில் ஆரஞ்சு சாறு தயாரிக்கும்போது, அதன் விதைகளையும் சேர்த்து இனிமேல் ஜூஸ் தயாரியுங்கள். இதனால் இந்த பழத்தின் முழு சக்தியை உங்களால் பெற முடியும்.

சுவையூட்டும் எசன்ஸ்

ஆரஞ்சு விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், தண்ணீர், கேக் மற்றும் இதர உணவுகளில் சுவையூட்டியாக பயன்படுகிறது. சில நேரங்களில் வீட்டில் நறுமணத்தை அதிகரிக்கவும் ஆரஞ்சு விதைகள் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் குளியலறையின் பாத் டப்பில் இந்த எசென்ஸ் உபயோகிப்பதால் சிட்ரஸ் நறுமணத்தை பெற முடியும். அல்லது diffuser எண்ணெயயாக இதனை விளக்குகளில் பயன்படுத்துவதால் வீடு முழுவதும் ஒரு நல்ல நறுமணம் வீசலாம். இதனால் வீட்டில் இருக்கும் துர்நாற்றத்தை விரட்ட முடியும்.

ஆற்றல் அதிகரிக்க

சில நேரங்களில் காரணமே இல்லாமல் மிகவும் சோம்பேறித்தனமாக நீங்கள் உணரலாம். மிகவும் சோர்வாக இருக்கும் இந்த தருணங்களில் ஆரஞ்சு விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நேரத்தில் ஆரஞ்சு விதைகளை உட்கொள்வதால், உங்கள் உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. பல்மிடிக், ஓளிக், லினோலிக் அமிலம் போன்றவை ஆரஞ்சு விதையில் இருப்பதால் நீண்ட நேரம் உங்கள் ஆற்றல் சேமித்து வைக்கப்படுகின்றன. ஆகவே, உங்கள் உடலில் ஆற்றல் இல்லை என்பதை நீங்கள் உணரும் நேரம் உடனடியாக ஆரஞ்சு விதைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

கூந்தல் பாதுகாப்பு

ஆரஞ்சு விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், கூந்தல் பராமரிப்பிற்கு ஒரு சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. ஆரஞ்சு விதைகளில் வைட்டமின் சி மற்றும் பயோ-ப்லேவனைடு ஆகியவை உள்ளன. இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆரோக்கியமான நீண்ட கூந்தல் பெற உதவுகிறது. மேலும், ஆரஞ்சு விதைகளில் நிறைந்துள்ள போலிக் அமிலம், முடி வளரச்சியை ஊக்குவிக்கிறது. மாறும் நுனி முடி வரை வலிமையைத் தர உதவுகிறது.

சுத்தம் செய்கிறது

ஆரஞ்சு விதைகள் சுத்தம் செய்வதற்கு பயன்படுவது பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆரஞ்சு விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மெஷின்களில் உள்ள கிரீஸை சுத்தம் செய்யவும், உலோகம் மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய்யில் ஒரு புதிய மற்றும் மென்மையான நறுமணமும் உள்ளது, அது ஒரு நல்ல சுத்தமான மற்றும் ஒரு நல்ல வாசனையுள்ள வீட்டை உறுதி செய்யும்.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024