Sunday, May 14, 2017

பிளஸ் 2 முடித்தோர் அடுத்து என்ன செய்ய வேண்டும்?முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவுரை 

பதிவு செய்த நாள் 13 மே2017 19:26

'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எந்த படிப்பை தேர்வு செய்தாலும், படிக்கும் போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ற, தனித்திறன்களை வளர்க்க வேண்டும்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதல் இடம், இரண்டாம் இடம் என்ற, ரேங்கிங் முறைக்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு, பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

தனித்திறன்

எனவே, மாணவர்கள் வெறும் மதிப்பெண் என்ற மனப்பாட கல்வியை விட்டு, தனித்திறன் வளர்க்க வேண்டும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், தமிழக பள்ளி கல்வித்துறையின் உயர்மட்ட கமிட்டி ஆலோசகருமான, பாலகுருசாமி கூறியதாவது:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நல்ல முடிவு கிடைத்துள்ளது. அவர்கள் தேவையற்ற பயத்தை விட்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு துணிச்சலுடன் செல்ல வேண்டிய நேரம் இது.
'பிளஸ் 2வில், எத்தனை மதிப்பெண் எடுத்தோம் என்பதை விட, அடுத்து என்ன செய்யப் போகிறோம்' என்பதே அவர்களின் முக்கிய முடிவாக இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு

அதிக மதிப்பெண் எடுத்தாலும், குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், அனைவருக்கும் உயர் படிப்பு வாய்ப்புகளும், அதிக வேலை வாய்ப்புகளும் உள்ளன. அதில், கடினமான படிப்பு, எளிதான படிப்பு என்பதெல்லாம் இல்லை. வேளாண்மை, இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் என, இதில், எந்த படிப்பில் சேர்ந்தாலும், மாணவர்களின் படிப்புடன் தனித்திறன்கள் தான், அவர்களை முன்னேற்றி செல்லும். எனவே, அதற்கான முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

இனி வரும் காலங்களில், வெறும் மதிப்பெண்ணுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை மாறும். மதிப்பெண்ணுடன் அவர்களின் சிந்தனை, செயல்திறன் இணையாக இருக்க வேண்டும்.
அதற்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். படிக்கும்போதே, தனித்திறன் வளர்ப்பு, பொது அறிவை மேம்படுத்துதல், தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளுதல் என, செயல்பாடுகள் விரிவடைய வேண்டும்.

உயர் கல்வியில் சேர்ந்தாலும், பல நுழைவு தேர்வுகள் உள்ளன. அதையும் எதிர்கொள்ள வேண்டும். படிப்பு முடிந்த பின், வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகள் உள்ளன. அதற்கு புத்தக மதிப்பெண்ணை விட, சிந்தனை திறனே உதவும். அதற்கேற்ப மாணவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...