Sunday, June 18, 2017

ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல் !!

தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண் இணைக்காத 1 லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காஸ் மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறையை மத்திய அரசு அறிமுகம்
செய்தது. இதற்கு அனைவருக்கும் வங்கிக்கணக்கை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டது. இதுதவிர மத்திய அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலை உறுதி திட்டம், உணவு மானியம், பள்ளிகளில் இலவச மதிய உணவு, விவசாயிகள் பயிர்க்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் காஸ் பெறுதல், அரசின் மானிய உதவிகளை பெறுதல், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான மத்திய அரசின் பீம் ஆப்பில் வங்கிக் கணக்கை இணைத்து பணம் அனுப்புதல் போன்றவை ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், அடையாளச்சான்று, முகவரிச்சான்று என எண்ணற்ற வகையில் ஆதார் பயன்பாடு உள்ளது. ஜூலை 1க்கு பிறகு புதிய பான் கார்டு விண்ணப்பிக்கவும், ஆதார் வைத்திருப்பவர்கள் பான் அட்டையுடன் இணைத்து ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்ட பயன்கள் உரியவருக்கு சென்று சேர வேண்டும், போலி பயனாளிகளை ஒழிக்க வேண்டும், மானியச்சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

இதே வரிசையில், ஓய்வூதியர்கள் ஆதார் மூலம் உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமாண் இணையதளம் மூலம் அல்லது பொது சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத்துக்கு செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்தே எளிதாக உயிர்ச்சான்று சமர்ப்பிக்க ஜீவன் பிரமாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஓய்வூதிய தாரர்கள் மட்டுமின்றி, பிஎப் ஓய்வூதியம் பெறுவோரும் ஆதாரை இணைக்க வேண்டும். பி.எப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் தகுதி படைத்தவர்கள். இதில், ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண் மற்றும் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழினை (டிஜிட்டல் ஜீவன் பிரமாண் பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுவரை உயிர்வாழ் சான்றிதழை அதற்குரிய படிவத்தில் வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் இந்த ஆதார் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அங்கு ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.

ஏப்ரல் 17ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டபோது அந்தந்த பி.எப் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் ஆதார் எண் இணைக்க தவறியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு ேம மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பிஎப் அலுவலகத்துக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு முதல் வங்கி கணக்கு வரை ஆதார் முக்கியமாகி விட்டது.

ஆதார் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு ரத்தாகும்

காஸ் மானியம் உட்பட பல்வேறு மானியங்கள் பெற ஆதார் வேண்டும்.

பிஎப் பென்ஷனுக்கு ஆதார் எண் இணைக்க அவகாசம் முடிந்து விட்டது.

ஆதார் இணைக்காவிட்டால் பென்ஷன் நின்று விடும் ஆபத்து உள்ளது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...