Tuesday, September 5, 2017

நாளை முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் : தடையை நீட்டிக்க ஐகோர்ட் மறுப்பு
பதிவு செய்த நாள்04செப்
2017
23:37

சென்னை: 'வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதை, ௫ம் தேதி வரை கட்டாயமாக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை நீட்டிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அதனால், வாகன ஓட்டிகள், நாளை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

'தமிழகத்தில், வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்து இருப்பது, செப்., ௧ முதல் கட்டாயமாகிறது' என, மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டது.

உத்தரவாதம் : 'அசல் உரிமம் வைத்திருக்கும்படி, ஓட்டுனர்களை வற்புறுத்தக் கூடாது' என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், சுகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன் உள்ளதாகவும், இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதாகவும், அட்வகேட் ஜெனரல் கூறினார். அத்துடன், 'செப்., 4 வரை, அசல் உரிமம் உத்தரவை அமல்படுத்த மாட்டோம்' என்றும், நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, 'செப்., 5 வரை, அசல் உரிமம் உத்தரவை அமல்படுத்தக் கூடாது' என, நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார். இதற்கிடையே, அரசின் உத்தரவை எதிர்த்து, 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
வழக்கு குறித்து, ராமசாமியின் வழக்கறிஞர் முறையிடவே, பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், வாதாடினார். 

அப்போது, லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் கோவிந்தராமன், ''நாங்கள் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை; ஏற்கனவே, அசல் உரிமம் தொடர்பாக, அட்வகேட் ஜெனரல், உத்தரவாதம் அளித்துள்ளார்,'' என்றார்.

என்ன பிரச்னை : தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ''அசல் உரிமம் வைத்திருப்பதில், உங்களுக்கு என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க கோரியதை, 'முதல் பெஞ்ச்' ஏற்கவில்லை. மேலும், வழக்கை, ௮ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது. இதனால், வாகன ஓட்டிகள், நாளை முதல், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

'ஸ்டிரைக்' அறிவிப்பு : தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், முனிரத்னம் கூறியதாவது:ஓட்டுனர்கள், எந்நேரமும் அசல் உரிமம் வைத்திருப்பது சாத்தியமற்றது. இதனால், விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுனர்கள், தப்பி விடுவர். இந்த உத்தரவு, போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, லஞ்சம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
வரும், 14ல், மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், சேலத்தில், இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன்பின், மாநிலம் முழுவதும், 'ஸ்டிரைக்' நடத்த உள்ளோம்; ஸ்டிரைக் தேதி, 14ல் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...