Friday, September 8, 2017

செல்ல நாய்க்காக எம்.பி.பி.எஸ்., படிப்பை துறந்தவருக்கு 21 பதக்கம்

பதிவு செய்த நாள்
செப் 08,2017 01:02




தான் வளர்த்த நாய்க்குட்டியின் மீதான அன்பால், மருத்துவ படிப்பை துறந்து, கால்நடை படிப்பில் சேர்ந்த மாணவர், 21 பதக்கங்களை பெற்று, அசத்தி உள்ளார்.

தமிழ்நாடு, கால்நடை மருத்துவ பல்கலையில், பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், 175 மாணவியர் உட்பட, 257 பேருக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், பட்டங்களை வழங்கினார். இளநிலை கால்நடை படிப்பில் அதிகபட்சமாக, 214 பேர் பட்டம் பெற்றனர்.

பல்கலை துணைவேந்தர், திலகர் பேசுகையில், ''இந்த ஆண்டு, 320 இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு, 15 ஆயிரத்து, 869 விண்ணப்பங்கள் வந்தன. இதில் இருந்து, இப்படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதை அறியலாம்,'' என்றார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக துணைத் தலைமை இயக்குனர், நரேந்திர சிங் ரத்தோர் பேசுகையில், ''பால், கோழி, இறைச்சி தொழில்களை துவங்குவது பிரபலமாகி வருகிறது. 

''நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்தாலும், கறவை மாடுகளின் தனித்திறன் குறைந்து வருகிறது. எனவே, பட்டம் பெற்றுச் செல்லும் உங்களின் சேவை, அதிகம் தேவை,'' என்றார்.

பல்கலையில் சிறந்து விளங்கியோருக்கு, 86 பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த, நெசவு ஆலை உரிமையாளரின் மகன், ராஜமாணிக்கம், 21 பதக்கங்களை வென்றார். முதுகலை பயிலும் அவர் கூறியதாவது:

எனக்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் கிடைத்தது. நான், சிறுவயதில், 'ஜிம்மி' என்ற நாய் வளர்த்தேன். அதன் மீது ஏற்பட்ட பிரியத்தால், கால்நடைகளுக்கு உதவ முடிவு செய்தேன்.

அதனால், மருத்துவ படிப்பில் சேராமல், கால்நடை மருத்துவத்தில் சேர்ந்தேன். எதிர்காலத்தில், கால்நடைகளுக்கு, ரத்தசோகை நோயை குணப்படுத்த ஆய்வு செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடை அமைச்சர் ராதாகிருஷ்ணன், துறை செயலர், டாக்டர் கோபால், கால்நடை இயக்குனர், செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 07.07.2026