Wednesday, September 6, 2017

அக்யூட் டிராமா..! - அனிதா தற்கொலைக்கு உளவியல் விளக்கம்

VIKATAN

"என் அம்மா நோயுற்றுத் தவித்தபோது சரியான மருத்துவம் கிடைக்கவில்லை. அதனால், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இருந்திருந்தால் என் அம்மாவைக் காப்பாற்றி இருக்கலாம். இனி எங்கள் கிராமத்தில் எந்தப் பிள்ளையும் மருத்துவ வசதி கிடைக்காமல் அம்மாவை இழக்கக்கூடாது. அதற்காகவே, நான் மருத்துவம் படிக்கப்போகிறேன்...' ஏன் நீங்கள் மருத்துவத்தைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்ட நிருபருக்கு அனிதா சொன்ன பதில் இது.



எந்தப் பின்புலமும் இல்லாத அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் அனிதா. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் மரணம் தான், அனிதாவின் மனதில் மருத்துவக் கனவை விதைத்தது.

அப்பாவும், 4 சகோதரர்களும் அனிதாவை மருத்துவராக்குவதற்காக உழைத்துத் தேய்ந்தார்கள். அனிதா, எந்தச் சூழலிலும் தன் இலக்கில் இருந்து திசை திரும்பவில்லை. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் குவித்தார். மெடிக்கல் கட் ஆப் 196.75.

இரவு பகல் பார்க்காத படிப்பு, கவனச்சிதறல் இல்லாத உழைப்பால் தான் இலக்கு வைத்த மருத்துவப் படிப்பை எட்டிப்பிடிக்கும் விளிம்பில் நின்றபோதுதான் 'நீட்' தடையாக வந்து மறித்தது.

அனிதா மட்டுமல்ல... அவரது குடும்பமே நிலைகுலைந்தது. வாழ்நாள் உழைப்பைக் கொட்டி மகளை மருத்துவராக்கிப் பார்க்க நினைத்த அனிதாவின் தந்தை சண்முகமும், சகோதரர்களும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

குழப்பம் நீக்கி, மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு, தன்னைத் தற்காத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று விடுவோம் என்று மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டு, மறுபக்கம். மத்திய அரசுக்கு அதற்கான அழுத்தத்தைத் தர எந்த முயற்சியும் எடுக்காமல் சமரசம் செய்துகொண்டு விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தருவோம் என்று பேசுவதும், டெல்லி சென்றபிறகு, மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமெல்லாம் உருவாக்க முடியாது என்று வேறு முகம் காட்டினார்கள்.

கடந்த ஆறுமாத காலமாக மாணவர்களை உச்சபட்சமான குழப்பத்திலேயே வைத்திருந்த மத்திய, மாநில அரசுகள், இறுதியில் கைவிரித்து விட்டார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, 'மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வையுங்கள்' என்று உச்ச நீதிமன்றத்திடம் சொல்லி, தீர்ப்பை நிறுத்திய மத்திய அரசு, 'நீட் தேர்வு கட்டாயம் என்று கோர்ட் சொல்லிவிட்டது, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கை விரித்துவிட்டது.



கண்டிப்பாக விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்த அனிதாவுக்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்தபோது வேறு வாய்ப்பிருக்கவில்லை. லட்சங்களில் கொட்டிக்கொடுத்து, தனிப்பயிற்சி எடுக்கவும் சாத்தியமிருக்கவில்லை.

இருந்தும் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவிகிதம், சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்று அரசாணை போட்டது தமிழக அரசு. அந்த ஆணை வெளிவந்தபோதே, வலுவற்ற இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்கப்போவதில்லை என்று கல்வியாளர்கள் சொன்னார்கள். அதுதான் நடந்தது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம். இந்த வழக்கில் எதிர்வாதியாக அனிதா தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், நீதிமன்றத்தின் காதுகளில் அனிதாவின் அவலக்குரல் விழவில்லை. 'தமிழக அரசின் உத்தரவால், சிபிஎஸ்சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் நளினி சிதம்பரம்.

அத்தனை கதவுகளும் மூடப்பட்டப் பின்னர், அனிதா மிகுந்த குழப்பத்துக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். ஒரு கட்டத்தில், 'இனி தான் கண்ட கனவு பழிக்கப்போவதில்லை... தன் தந்தையும், சகோதரர்களும் உழைத்த உழைப்பு வீணாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அனிதா தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.

வறுமை, ஏற்றத்தாழ்வுகள், சிறு வயதிலேயே தாயை இழந்த சோகம் என எல்லாத் தடைகளையும் விடாமுயற்சியால் உடைத்தெறிந்து ப்ளஸ் டூ-வில் 1176 மதிப்பெண்கள் வரை பெற்று முன்மாதிரியாக உயர்ந்து நின்ற அனிதாவைத் தற்கொலை நோக்கித் தள்ளியது எது?



தமிழகத்தில் கடந்தாண்டு 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினார்கள். அதில் அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். அதில் 1 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பை இலக்கு வைத்துப் படித்திருப்பார்கள். அவர்களின் முழுக்கவனமும் பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் பெறுவதாக மட்டுமே இருந்திருக்கும். ஏராளமான மாணவர்கள் 1000-த்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள். தமிழக அரசின் உண்மை முகம் அறிந்து, முன்கூட்டியே நீட் தேர்வுக்குத் தயாரான கொஞ்சம் மாணவர்கள் மட்டுமே முட்டிமோதி எம்பிபிஎஸ் சீட்டைப் பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசின் வார்த்தைகளை நம்பி நீட் தேர்வுக்குத் தயாராகாத எல்லா மாணவர்களுமே செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை எப்படி மீட்கப்போகிறோம்?

"எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வில்லை என்று சில 'நடுநிலை வாதிகளும், 'சமூகப் போராளிகளும்' இப்போது பேசுகிறார்கள். நீட் தேர்வுக்கு சமூக நீதிக்கு எதிரானது; அனிதா போன்று அடித்தட்டில் இருந்து தடையுடைத்து மேலெழுந்து வரும் மாணவர்களுக்கு விரோதமானது; பணத்தைக் கொட்டி தனிப்பயிற்சிக்குச் செல்ல முடியாத ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு விரோதமானது என்று தொடக்கத்தில் இருந்தே சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாநில அரசும் பிரச்னையின் உண்மையான மையத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதற்கு விலையாகத்தான் அனிதா என்ற மகளை அள்ளிக் கொடுத்திருக்கிறோம். அனிதா தமிழகத்தின் மகள். அவர் தற்கொலையை தமிழகத்தில், உரிய தகுதிகள் இருந்தும் நீட் தேர்வால் தகுதியிழந்து நிற்கும் பல ஆயிரம் மாணவர்களின் மனநிலையை உணர்த்தும் பிம்பமாகப் பார்க்க வேண்டும். இது சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி. அனிதாவின் மரணத்துக்கு இந்த அரசுகள் மட்டும் காரணம் அல்ல. சிறிதும் உணர்வின்றி வாழும் நீங்களும் நானும் கூட காரணம்தான்.

மாணவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த சமூகம் துணை நிற்க வேண்டும்..." என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

" அனிதாவின் தற்கொலை என்னை மிகவும் பாதித்திருக்கிறது. மனம் நொறுங்கும் அளவுக்கு ஓர் மோசமான சம்பவம் நடக்கும்போது தற்கொலையைத் தீர்வாக நினைப்பது சராசரியான ஒரு மனிதச் செயல்பாடு. அதைக் கடந்து நிற்கப் பழக வேண்டும்." என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

"அனிதா மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்டிருந்தார். அது வாய்க்காது என்றபோது பெரும் ஏமாற்றம் அவரைச் சூழ்ந்து விட்டது. இதுபோன்ற ஏமாற்றங்கள் மனதளவில் மிகக் கொடூரமான காயங்களை உண்டாக்கிவிடும். இந்த நிலைக்கு 'அக்யூட் டிராமா' (acute trauma) என்று பெயர். ' இனி நமக்கு எதிர்காலமே இல்லை' என்று எண்ணத் தோன்றும்.

இந்த நிலை உருவானபிறகு, மனம் நிலையிழந்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு யோசிப்பார்கள். இதுதான் அனிதா விஷயத்திலும் நடந்திருக்கிறது. அனிதாவுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன செய்தாலும் அவரின் இழப்புக்கு ஈடாக இருக்காது.

இனியொரு சம்பவம் நிகழாமல் இருக்க, மத்திய மாநில அரசுகள் எவ்வித தயக்கமும் நிபந்தனையும் இன்றி நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். சுகாதாரத்தில் பிற மாநிலங்களை விட தமிழகம் மிகச் சிறப்பாக முன்னேறியிருக்கிறது. அதற்கு இங்கிருந்த தலைவர்களே காரணம். தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் இந்த கல்வி நிறுவனங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வாய்ப்பை, உரிமையை மத்திய அரசு பறிப்பது மிகப்பெரும் அநீதி.." என்கிறார் ஷாலினி.



மத்திய மாநில அரசுகள் அனிதாவின் மரணத்துக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்!

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...