Saturday, July 7, 2018

உங்கள் பாதையில் எங்கள் காருக்கும் கொஞ்சம் வழிவிடுங்கள் ரத்தன் டாடா!



ரஞ்சித் ரூஸோ  vikatan

ஜூன் மாதம் ஒரே ஒரு நானோ கார்தான் உற்பத்தியானதாக சொல்கிறது டாடா மோட்டார்ஸ். நஷ்டத்தில் நானோ...



மாருதி முதல் ஆஸ்டன் மார்டின் வரை மற்ற நிறுவனங்களிடமிருந்து ஒரு கார் உருவாகிறது என்றால் அதில் லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கும். ஆனால், டாடாவில் இருந்து வரும் காரில் சில கனவுகள் இருக்கும். ரத்தன் டாடாவின் கனவுகளில் இருந்து உருவான ஒரு கார்தான் நானோ.



சமீபகாலமாக டாடா நானோவின் விற்பனை சரிவுநிலையிலேயே இருந்தது. அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் மாதம் ஒரே ஒரு டாடா நானோ கார் மட்டுமே உற்பத்தி செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25 நானோ கார்கள் ஏற்றுமதியாகின. ஆனால், இந்த மாதம் ஏற்றுமதியே இல்லை. அதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 275 நானோ கார்கள் தயாரானது. ஆனால், இந்த மாதம் ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்திசெய்துள்ளார்கள்.

டாடா நானோ, பைக் - ஸ்கூட்டர் போன்றவற்றில் குடும்பமாகப் பயணிக்கும் நடுத்தர வர்க்க மக்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட காராகும். இது ரத்தன் டாடாவின் செல்லப்பிள்ளை. உலகில் 1 லட்ச ரூபாய்க்கு ஒரு கார், யார் தருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, ரத்தன் டாடாவின் மூலைக்கும் தொழிலுக்கும் கடும் சவாலான ஒரு வேலையில் உருவான கார்தான் நானோ. டாடா நிறுவனத்துக்கு இது நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் ரத்தன் டாடாவுக்கு இந்தக் காரின் உற்பத்தியை நிறுத்துவது பிடிக்கவில்லை. உலகெங்கும் உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் பாராட்டையும், விருதுகளையும் ஒருசேரக் குவித்த இந்தக் கார், ரத்தன் டாடாவுக்கு உணர்வுரீதியாக நெருக்கமான காராக தானே இருக்கும்.

``நிலைமை தற்போது இருப்பதைப் போன்றே இருந்தால், 2019-ம் ஆண்டைக் கடந்து நானோ பிழைக்காது. நானோவை மீட்க புதிய முதலீடுகள் தேவைப்படும். ஆனால், அதைப்பற்றிய எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை" என்று அந்த நிறுவனத்தினர் தற்போது சொல்கிறார்கள்.



ஒரு லட்ச ரூபாய்க்குக் குறைவான விலையில் டாடா, கார் விடப்போகிறது என்ற ஒரு நிருபர் தவறாகப் பதிவுசெய்த செய்தியால் உருவானதுதான் இந்தக் கார். மார்ச் 2009-ல் நானோ விற்பனைக்கு வந்தது. கார் விற்பனைக்கு வந்ததுமுதல் பிரச்னைதான். மேற்கு வங்க தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு அங்கு நடைபெற்ற போராட்டங்களால் உற்பத்தி குஜராத் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டது; ஆங்காங்கே நானோ கார்கள் சாலையில் தீப்பற்றி எரிந்ததாகப் புகார்கள்; உலகின் விலை மலிவான கார் எனும் டேக் லைன் அதை வாங்குபவர்களை யோசிக்கவைத்தது எனப் பல பிரச்னைகளுக்கு இடையிலும் நானோவை விட்டுக்கொடுக்க டாடாவுக்கு மனமில்லை.



நானோ காரை வடிவமைக்கும்போது, அதன் அடிப்படை விலை ஒரு லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதல் காரின் விலை அதிகமாகவே இருந்துவந்திருக்கிறது. இந்தக் காரால் ஏற்பட்ட நஷ்டம், ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. லாபத்துக்கான அறிகுறியே தென்படாத நிலையில், நானோவை விற்பனை செய்வதில் அர்த்தம் இல்லை. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உணர்வுபூர்வமான தயாரிப்பாக இது இருந்து வந்ததாலேயே இந்த முடிவை எடுக்கத் தயங்குகிறோம்'' எனக் காட்டமாகப் கடிதம் எழுதினார் இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி.

இந்தக் காரைத் தயாரிப்பதற்கான முதலீடு அதிகரித்துக்கொண்டே வருவதால், எத்தனை நானோ கார்களை விற்பனை செய்கிறோமோ, அவ்வளவு நஷ்டம் அடைகிறோம் என அர்த்தம்,'' என்று ஒரு வருடத்துக்கு முன்பே டாடா ஊழியர் ஒருவர் பேசியிருந்தார்.



தற்போது ஒரே ஒரு நானோ தயாரிக்கப்பட்ட செய்தி ஆட்டோமொபைல் ஆர்வலராக பார்த்தால் பெரும் வருத்தத்தை மட்டுமே தருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நானோவால் டாடாவுக்கு நஷ்டம்தான். ஒரே ஒரு காருக்காக ஒரு புரொடக்‌ஷன் லைனை நடத்தும் அளவு டாடாவின் நிலை உள்ளது. ஏமோஷனல் காரணங்களைத் தாண்டி யோசிக்க வேண்டிய தருணம் இது. டாடா நானோவின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, அந்த புரொடக்‌ஷன் லைனில் இன்னொரு காரை உருவாக்கலாம். நானோ போல அல்ல அதைவிடச் சிறப்பாக ஒரு காரை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு பலர் டாடா நிறுவனத்திலேயே இருக்கிறார்கள். பாதையை நீங்கள் உருவாக்கிவிட்டீர்கள், உங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொஞ்சம் வழிகாட்டுங்கள் ரத்தன் டாடா.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024