Friday, September 15, 2017

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி: முதல்வர் உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்

Published : 15 Sep 2017 08:03 IST

சென்னை



அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக தங்களிடம் முதல்வர் உறுதியளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருபிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர், தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் உள்ளனர். முதல்வர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். இந்நிலையில் அப்பிரிவைச் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன் (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்), பெ.இளங்கோவன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர்), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் கே.மணிவாசகன் உள்ளிட்டோர் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.


இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் இல்லாமல் இருப்பின் அக்டோபர் மாதத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இல்லையென்றால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் அளிக்கப்படும் என்று முன்பு முதல்வர் அளித்திருந்த அதே உறுதிமொழியை இப்போது மீண்டும் அளித்துள்ளார். அதேபோல், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு எந்த சூழ்நிலையிலும் காலநீட்டிப்பு செய்யப்படாது. முடிந்தவரை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

எனவே, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கள் போராட்டத்தை அக்டோபர் வரை தள்ளிவைத்துவிட்டு பொறுமை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கணேசன் கூறும்போது, “கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய ஊதிய விகிதம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை செப்டம்பர் 30-ம் தேதி கிடைத்ததும் நடவடிக்கை எடுப்பதாகவும், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நவம்பர் 30-ம் தேதி கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். அதை ஏற்றுத்தான் எங்களின் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம்” என்றார்.

இரா.சண்முகராஜன் கூறும்போது, “கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கூடியவர் முதல்வர்தான். அவர் கொஞ்சம் அவகாசம் கேட்டுள்ளார். அந்த வகையில்தான், ஜனநாயகத்தின் அடிப்படையில் அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...