Sunday, July 22, 2018

என்ன நடக்குதுன்னே தெரியலியே!ஆளும் கட்சியில் பரிதவிக்கும் தொண்டர்கள்
லோக்சபா தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கட்சியில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல், அ.தி.மு.க., தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.

dinamalar 22.07.2018




லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி விட்டன.தேசிய கட்சியான, பா.ஜ., சார்பில், அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக, நிர்வாகிகள் கூட்டம், மக்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது.

நடவடிக்கை இல்லை

தி.மு.க., சார்பிலும், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முறையாக நியமிக்கப்பட்டுள்ளனரா என, கட்சி தலைமை நியமித்துள்ள குழு, ஆய்வு செய்து வருகிறது.காங்., கட்சி சார்பில், சட்டசபை தொகுதி வாரியாக, நிர்வாகிகள்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினியும், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.


புதிதாக துவக்கப்பட்டுள்ள, மக்கள் நீதி மையம் சார்பில், பொறுப்பாளர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. தினகரன் கட்சியில், லோக்சபா தொகுதி வாரியாக, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர, அனைத்து கட்சிகளும், மறைமுகமாக மற்ற கட்சிகளுடன், கூட்டணி பேச்சுகளை துவக்கி உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள,

அ.தி.மு.க., எந்தவித நடவடிக்கையும் இல்லாமல், முடங்கி உள்ளது. கட்சியில், வழி காட்டிக் குழு அமைக்கப்படும் என, அறிவித்தனர்; நடவடிக்கை இல்லை.

தினகரன் கட்சிக்கு சென்றவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். காலியான பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.அணிகள் இணைந்த பின், பலர் பதவியை எதிர்பார்த்தனர். இதுவரை, எந்தபலனுமில்லை. மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் நிர்வாகிகள் கூட்டம், எதுவும் நடைபெறவில்லை. இதனால், கட்சியினர் சோர்ந்துஉள்ளனர்.

சமீபத்தில், கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், வழிகாட்டி குழு அமைக்கப்படும், புதிய நிர்வாகிகள் பட்டியல் வரும் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்.ஆனால், யார் ஆதரவாளர்களை நியமிப்பது என்பதில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பினருக்கும் இடையே, ஒருமித்த கருத்து ஏற்படாததால், அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன.

கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

உறுப்பினர் சேர்க்கையும் எதிர்பார்த்த அளவு இல்லை. ஏற்கனவே, 1.50 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறி வந்தோம். தற்போது, 90 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இன்னும், 60 லட்சம் பேரை சேர்க்க வேண்டி உள்ளது.இதற்கு கட்சி நிர்வாகிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் பலர், கட்சி பதவியை எதிர்பார்த்தனர்.கட்சி தலைமை, எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறுவதால், பலர், சொந்த தொழிலை பார்க்க சென்று விட்டனர்.

ஆடி முடியட்டும்

அமைச்சர்கள், தங்கள் கோஷ்டியை மட்டும் வளர்க்க பார்க்கின்றனர். மற்றவர்களைகண்டுகொள்வதில்லை. கோஷ்டி பூசல் குறித்து, கட்சி தலைமையிடம் கூறினாலும், நடவடிக்கை இல்லை.பன்னீர்செல்வத்திற்கும், பழனிசாமிக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக, தகவல்கள் வெளியாகின்றன.அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தாலும், பழனிசாமி தரப்பினர், பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

அமைச்சர்கள் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுவும், கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், கட்சி தலைமை தயங்குகிறது.எம்.எல்.ஏ.,வாக இருப்பவர்கள், தினகரன் கட்சி பொறுப்பில் உள்ளனர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில், கட்சி தலைமை உள்ளது. ஜெ., இருந்தால், இதுபோல் நடக்குமா?

அனைத்து கட்சிகளும், லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், எங்கள் கட்சியின் நிலை என்ன என்பதே தெரியவில்லை.இது குறித்து, கட்சி தலைமையிடம் கேட்டால், 'ஒரு வாரம் பொறுங்கள்' என்று மட்டும், பல மாதங் களாக பதில் சொல்லப்படுகிறது. தற்போது, 'ஆடி மாதம் முடியட்டும்' என்கின்றனர். மாதங்கள் கடந்தபடி உள்ளன.மாற்றம் எதுவும் இல்லை. இதே நிலை நீடித்தால், பதவியில் உள்ளவர்கள் மட்டுமே, கட்சியில் இருக்கும் சூழல் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர்

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024