Wednesday, July 25, 2018


மது விருந்து; வீடியோ கால்; ஹாஸ்டல் உரிமையாளர்! - மாணவிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் காப்பாளர்
 
பெண்களைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் சிக்கித் தலைமறைவாகியிருக்கிறார், கோவையில் உள்ள தனியார் பெண்கள் விடுதியின் உரிமையாளர் ஒருவர். ` பர்த் டே பார்ட்டி' என்ற பெயரில் கல்லூரி மாணவிகளை திசைதிருப்ப முயற்சி நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகிவிட்டனர்' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
கோவை, பீளமேட்டை அடுத்துள்ள ஹோப் காலேஜ் பகுதியில் `தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதி' செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் மகளிர் என இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். பீளமேட்டைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியின் காப்பாளராக புனிதா என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் விடுதியில் உள்ள மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் புனிதா. அங்கு மாணவிகளுக்குக் கட்டாய மதுவிருந்து அளித்துள்ளார். இந்தத் தகவல் விடுதியில் உள்ள மற்ற பெண்களுக்குத் தெரியவரவே, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, நள்ளிரவில் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர் பெற்றோர். இதை எதிர்பார்க்காத விடுதிக் காப்பாளர் புனிதா தலைமறைவாகிவிட்டார். 

விடுதியில் தங்கியுள்ள பெண்கள் சிலரிடம் பேசினோம். `` பெரும்பாலும் போதையிலேயே இருப்பார் புனிதா. அன்னைக்கு சில மாணவிகளை மட்டும் 'ஹாஸ்டல் ஓனரின் ஸ்பெஷல் பார்ட்டி' என்றுகூறி வலுக்கட்டாயமாக ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிகளுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்துவிட்டு, விடுதி உரிமையாளர் ஜெகனாதனுக்கு வீடியோ கால் செய்து, ' சார்… உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க' என்றுகூறி அந்தப் பெண்களிடம் போனைக் கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிப் பார்த்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். வீடியோ காலில் தவறான கோலத்தில் இருந்திருக்கிறார் ஜெகநாதன். இந்தச் செயலை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில மாணவிகள் கதறி அழுதுள்ளனர். ஆனாலும், அவர்களை தவறாக வழிநடத்த முயன்றிருக்கிறார் புனிதா. அதில் ஒரு மாணவி, சக விடுதி மாணவிகளுக்குத் தெரியப்படுத்திருக்கிறார். அதன்பிறகே விவகாரம் வீதிக்கு வந்தது. எதிர்காலம் கருதி, புகார் அளிக்க மாணவிகள் முன்வராததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்து புனிதாவையும் ஜெகநாதனையும் தேடி வருகிறது போலீஸ்" என்றனர்.

பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் பேசினோம், `` ஜெகநாதன், புனிதா ஆகிய இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இருபிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அவர்கள் இருவரையும் தீவிரமாகத் தேடிவருகிறோம்" என்றார்

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024