Thursday, June 18, 2015

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நாளை தொடக்கம்: ஓமந்தூரார் வளாகத்தில் நவீன வசதிகள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது.
கலந்தாய்வு நடைபெற உள்ள சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்குகளில் பெற்றோர், மாணவர்களுக்காக நவீன வசதிகளைச் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:-
எம்.பி.பி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ள சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்குகளில் செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறையின் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் உள்ளிட்டோர் புதன்கிழமை பார்வையிட்டனர்.
12 எல்.இ.டி. திரைகள்: கலந்தாய்வு நடைபெறும்போது அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) ஆகியவற்றில் நிரப்பப்படும் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இடங்கள், காலியிடங்கள் குறித்து பெற்றோரும் மாணவரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் 12 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளன. அதாவது, கலந்தாய்வு நடைபெற உள்ள கூட்ட அரங்குகளில் மிகப் பெரிய அளவில் 4 எல்.இ.டி. திரைகள், அரங்குக்கு வெளியே 4 எல்.இ.டி. திரைகள், மாணவர்கள்-பெற்றோர் அமரும் நிழற்கூடத்தில் 4 எல்.இ.டி. திரைகள் என மொத்தம் 12 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வங்கி வசதி: கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் வரைவோலை எடுக்கவும், பணம் செலுத்தவும் தாற்காலிகமாக கணினிமயமாக்கப்பட்ட வங்கி வசதியும் செய்யப்பட உள்ளது. ஒரே சமயத்தில் 5 மாணவர்கள் அமர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்ய வசதியாக 5 கணினிகளும் கலந்தாய்வுக் கூட்டத்தில் இடம்பெறும். மேலும் மாணவர்கள்-பெற்றோர் அமர்வதற்கு வசதியாக சிறப்பு மருத்துவமனையின் வெளிப்புறப் பகுதியில் மிகப் பெரிய பந்தல், குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதி, கழிப்பறை வசதி ஆகியவையும் செய்யப்பட்டு வருகின்றன.
கலந்தாய்வு இடம் மாற்றம் ஏன்? கடந்த ஆண்டு வரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் பணிகள் கீழ்ப்பாக்கம் பகுதியில் நடைபெறுவதாலும், மாணவர்கள்-பெற்றோர் வசதிக்காகவும் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள அரங்குகளில் நடத்தப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...