Sunday, June 7, 2015

நடனத் தாரகை இ.வி.சரோஜா



எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா.

என்கண் தந்த கலைச்செல்வி

இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பழம்பெருமை மிக்க, பாடல்பெற்ற முருகன் தலமாக இருக்கும் ‘என்கண்’தான் இ.வி.சரோஜா பிறந்து வளர்ந்த ஊர். வேணு பிள்ளை ஜானகி அம்மையார் தம்பதியின் இரண்டாவது வாரிசாகப் பிறந்த இவருக்கு சிறு வயதுமுதலே நடனத்தில் ஆர்வம். இரண்டு வயதுமுதல் அம்மாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பிரகாசித்தார்.

அப்போது மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் பரதக் கலையின் வித்தக மையமாக விளங்கியது. அதற்குக் காரணம் வழுவூர்ப் பாணி நாட்டியம் டெல்லிவரை புகழ்பெற்று விளங்கியது. காண்போரை மயக்கும் லயசுத்தமும், அங்க சுத்தமும் கொண்டதே அதற்குக் காரணம். அதை உருவாக்கியவர் நாட்டிய மேதை நட்டுவனார் பி. ராமையாபிள்ளை.

திரையுலகில் அன்று முத்திரை பதித்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரின் மாணவிகளே. பதினோரு வயதில் இ.வி. சரோஜாவின் திறமையைக் கண்டு, அவரைத் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டு முறைப்படி நடனம் பயிற்றுவித்தார் வழுவூரார். ஆசானின் பெயரைக் காப்பாற்றும் விதமாக 14 வயதில் அரங்கேற்றம் செய்து 16 வயதுக்குள் 100 மேடை நிகழ்ச்சிகளில் ஆடிச் சாதனை புரிந்தார் சரோஜா.

மயக்கிய மான் நடனம்

அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபூர்வம். இ.வி. சரோஜாவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.

வழுவூர் பாணி நடனத்தை சினிமாவுக்கான நடத்துடன் இணைத்து ஒவ்வொரு நடன அசைவையும் இவர் நளினமாக வெளிப்படுத்திய பாங்கில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். இளம் மான்போல் துள்ளித் துள்ளி பல படங்களில் இவர் ஆடிய நடனம், ரசிகர்களின் இதயத்தை வருடியது.
பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய திரைக்கதாசிரியர் ஏ. பி. நாகராஜன் கதை, வசனம் எழுதி நடித்த ‘பெண்ணரசி’ படத்தை வேணுசெட்டியாரின் தயாரிப்பில் இயக்கினார் கே.சோமு. அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துத் தனது திறமையான நடனத்தால் கவர்ந்தார்.
பின்னர் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த ‘குலேபகாவலி’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் “சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்க ஜவாபு” என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜாவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

பின்னர் எம்.ஜி. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த ‘மதுரை வீரன்’ படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜி.ஆரை “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” என்று பகடி செய்யும் விதமாக இ.வி.சரோஜா பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜாவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.

மதுரை வீரனுக்குப் பிறகு ‘அமர தீபம்’, ‘ பாவை விளக்கு’, ‘கற்புக்கரசி’, ’எங்க வீட்டு மருமகள்’, ‘தங்கப் பதுமை’, ‘ நீலமலைத் திருடன்’ என்று சரோஜாவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜாவே முதலில் உடைத்தார்.
சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ்வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடனத் தாரகை

புகழின் உச்சியில் இருந்தபோது, இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், இ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் சரோஜாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜா ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் ‘மனோன்மணியம்’ காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். ஆனால் நடனத்தில் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் அமரத்துவம் பெற்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024