Thursday, February 9, 2017

அதிமுக வங்கிக் கணக்கு: பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஓ.பி.எஸ். கடிதம்

By DIN  |   Published on : 09th February 2017 04:58 AM  |
தனது எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் யாரும் அதிமுகவின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று முதல்வரும், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பேங்க் ஆப் இந்தியாவின் சென்னை மயிலாப்பூர் கிளை முதன்மை மேலாளருக்கு புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
ஜெயலலிதாவின் மறைவால் அதிமுகவின் பொதுச் செயலர் பதவி காலியாகவுள்ளது. அதிமுகவின் சட்ட விதி 20 பிரிவு 5-ன் படி, பொதுச் செயலர் பொறுப்பு காலியாக இருக்கும் நிலையில், ஏற்கெனவே இருந்த பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட மத்திய நிர்வாகக் குழு, துணை பொதுச் செயலர், பொருளாளர், தலைமை நிலையச் செயலர் போன்றோர் தொடர்ந்து அதே பதவிகளை வகிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பொதுச் செயலர் நியமிக்கப்படும் வரை இதே நிலை தொடரும் என அதிமுக சட்ட விதி தெரிவிக்கிறது.
இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொருளாளராக என்னை நியமித்தார். நான் அந்தப் பதவியில் தொடர்கிறேன். எனவே, தங்களது வங்கியில் உள்ள அதிமுகவின் நடப்பு கணக்கினை என்னைத் தவிர வேறு ஒருவரால் அதனை இயக்க அனுமதிக்கக் கூடாது. எனது எழுத்துப்பூர்வ ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாமல் இதைச் செய்யக் கூடாது என தனது கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.08.2026