Sunday, September 17, 2017

காசியில் விஷ்ணுபாதம் திருவெண்காட்டில் ருத்ரபாதம்! #மஹாளய அமாவாசை

RAGHAVAN M

தமிழ்நாட்டில் காசிக்கு நிகராகவும், ஆதிசிதம்பரம் என்றும், ருத்ரகயா என்றும் வேதங்களில் போற்றப்படும் நாகை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் மஹாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சிறப்புவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



தை மற்றும் ஆடி மாத அமாவாசையன்று மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். மூதாதையர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவதாக திருவெண்காடு கோயில் தல வரலாறு கூறுகிறது.

நவகிரகங்களில் ஒன்றான புதன் வீற்றிருக்கும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் காசிக்கு இணையாகக் கருதப்படும்
6 கோயில்களில் ஒன்றாகும். சிவபெருமானின் மூன்று கண்களிலிருந்து தோன்றிய பொறிகள் இக்கோயிலின் மூன்று தீர்த்தங்களாக அக்னி தீர்த்தம், சூரியன் தீர்த்தம், சந்திரன் தீர்த்தம் என்று அமைந்துள்ளதாகக் கூறுகிறது புராண வரலாறு.



இந்த மூன்று தீர்த்தங்களும் புனிதமான காவிரி தண்ணீரைக் கொண்டே நிரப்பப்பட்டு வந்தது. கடந்த சிலஆண்டுகளாகக் கடைமடைப் பகுதியான இங்கு காவிரிநீர் வராததாலும், போதுமான அளவு மழைநீர் கிடைக்காததாலும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் ராட்ஷச போர்வெல் அமைத்து மூன்று தீர்த்தங்களிலும் தண்ணீரை நிரப்பியிருக்கிறார்கள். மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, மஹாளய அமாவாசை மிகச்சிறப்பான நாளாகும். எதிர்வரும் 19.09.2017 செவ்வாய்கிழமை மஹாளய அமாவாசையன்று இக்கோயிலின் சந்திர தீர்த்தம் அருகிலுள்ள ருத்ரபாதத்தில் தர்ப்பணம் செய்வது விஷேசமாகும். அன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதுபற்றி கோயில் சிவாச்சாரியாரிடம் பேசியபோது, ”ருத்ரபாதத்தில் மூதாதையர்கள் நினைவாக தர்ப்பணம் செய்தால் 21 தலைமுறை செய்த பாவம் விலகும், மூதாதையர்கள் சொர்க்கத்தில் மோட்சம் பெறுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. கோயிலைச் சுற்றி காவிரிஆறு, மணிகர்ணிகை என்ற பெயரில் ஓடுகிறது. தற்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டிருக்கும் நிலையில், காவிரியில் நீராடி, ருத்ரபாதத்தில் தர்ப்பணம் செய்தால், கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், தர்ப்பணம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி வாழ்வில் வளம்பெற வேண்டுகிறேன்” என்றார்.




No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...