Monday, October 9, 2017

மாநில செய்திகள்

ஆஸ்பத்திரியில் சசிகலா 2–வது நாளாக நடராஜனை சந்தித்தார்; 45 நிமிடங்கள் அருகில் இருந்து கவனித்தார்


ஆஸ்பத்திரியில் கல்லீரல் மாற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை நேற்று 2–வது நாளாக சசிகலா சந்தித்தார். 45 நிமிடங்கள் அருகில் இருந்து அவரை கவனித்தார்.

அக்டோபர் 09, 2017, 03:45 AM

சென்னை,சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில், கடந்த 4–ந் தேதி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடராஜன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்து கடந்த 6–ந் தேதி சசிகலா பரோலில் வெளியே வந்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா வீட்டில் தங்கியுள்ள சசிகலா, நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி சென்று நடராஜனை சந்தித்து திரும்பினார். இந்த நிலையில், நேற்று 2–வது நாளாக சந்திப்பதற்காக பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரிக்கு முற்பகல் 11.40 மணிக்கு சசிகலா காரில் வந்தார். அவருடன் இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ண பிரியா, ‌ஷகிலா, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர்.

நேராக 2–வது மாடிக்கு சென்ற சசிகலா அங்குள்ள 2005–ம் எண் கொண்ட அறையில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தார். அப்போது, உறவினர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், 12.45 மணிக்கு கணவர் நடராஜனை சந்திப்பதற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள கல்லீரல் மாற்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு சசிகலா சென்றார்.

மதியம் 1.30 மணி வரை 45 நிமிடங்கள் அங்கிருந்த சசிகலா, கணவர் நடராஜனை அருகில் இருந்து கவனித்து கொண்டார். நடராஜனின் கழுத்தில் ‘டிரக்கியாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் பேச முடியவில்லை. அதனால், கையை அசைத்து சைகை மூலமே அவர் சசிகலாவுடன் பேசினார். அவரது சைகையை புரிந்துகொண்டு, சசிகலாவும் அதற்கான பதிலை அளித்தார். பரோல் முடிந்து சிறைக்கு திரும்புவதற்கு முன்பாக, மீண்டும் சந்திக்க வருவதாக நடராஜனிடம் சசிகலா தெரிவித்தார்.

பின்னர், அங்கிருந்து அறைக்கு திரும்பிய சசிகலா, மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டார். நேராக தியாகராயநகரில் உள்ள கிருஷ்ண பிரியா வீட்டிற்கு வந்த அவர் அங்கேயே ஓய்வெடுத்தார்.

நேற்று முன்தினம் நடராஜனை சசிகலா சந்திக்க சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் நிறைய பேர் அங்கு குவிந்தனர். எம்.பி.க்கள் உள்ளிட்ட சிலர் அவருடன் ஆஸ்பத்திரி உள்ளேயும் சென்றனர். இது கர்நாடக சிறைத்துறை விதித்த நிபந்தனைகளை மீறியதாக கூறப்பட்டது.

ஆனால், நேற்று சசிகலாவின் ஆதரவாளர்கள் யாரும் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. இதனால், அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசாரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.10.2024