Friday, October 27, 2017


திருப்பதி திருமலையில் நடைபெறும் பூஜையும், செய்யப்படும் முறையும்



திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். 

காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். 

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். 

பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.
பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். 

அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். 

சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். 

பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் "போக ஸ்ரீனிவாச மூர்த்தி" பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.
அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.
அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.
சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். 

சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். 

"விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.
இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-.
மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். 

திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். 

ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.
(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).
ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.
பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். 

சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.
பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். 

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. 

மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். 

அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.
பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.
சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். 

குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். தன்பிறகு தீபாராதனை நடக்கும்.
இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். 

சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.
அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். 

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். 

ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.
ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். 

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.
பூ கட்டுவதற்கு என "யமுனாதுறை" என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.
காலை 3.45 மணிக்கு "தோமாலை சேவை" ஆரம்பமாகும். 

சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். 

பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். 

அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். 

இதை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. 

பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா என மாறிவிட்டது.
கொலுவு தர்பார்: ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். 

இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.
இதற்காக உள்ள "கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி" விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. 

இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். 

ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.
பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். 

அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.
மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. 

மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முதல் மணி: 

அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.
மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும். 

இரண்டாவது மணி:
இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். 

அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.
ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும். 

சகஸ்ரநாம அர்ச்சனை: 

கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. 

இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். 

நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.
இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். 

சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். 

இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். 

காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.
சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். 

இதற்கும் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். 

அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது. 

ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும். 

அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு என்று பெயர். 

மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.
கல்யாண உற்சவம்: 

திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. 

அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். 

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். 

சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். 

ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.
கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். 

திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் 
அனுமதிக்கப்படுவார்கள். 

ஊஞ்சல் சேவை:
மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம் என்பர். 

அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். 

அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.
மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

யாத்ரீகர்களுக்கு பயன்படும் தங்கும் விடுதி 

வைணவ திவ்யதேசமான திருப்பதியில் யாத்ரீகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
புனித யாத்திரையில் பங்குபெறுபவர்கள் பெரும்பாலும் பூண்டு, வெங்காயம் இல்லாத வைதீக உணவையே விரும்புவர், ஆனால் திருப்பதியில் அவ்வாறான உணவு கிடைப்பது மிகவும் கடினம். அவ்வாறான உணவு பரிமாறும் இடத்தை தேடி அலையை வேண்டும். 

அது போல தங்குவதற்கு நல்ல சத்திர வசதிகள் இல்லாததால் ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜுகளை தேடி அலையை வேண்டும். 

இப்பொழுது அத்தகைய வைதீக உணவு மற்றும் தங்கும் வசதி திருப்பதியில் அதுவும் பேருந்து மற்றும் ரயில் நிலையத்தின் மிக அருகில், உங்கள் வசதிக்காக உணவு பார்சலும் செய்து தரப்படும். 

ஸ்ரீ வானமாமலை மடத்தின் சிஷ்யரான ஸ்ரீ. கோபாலக்ருஷ்ணன் சுவாமி, வைதீக உணவு வேண்டுவோருக்கு பிரத்யேகமாக தயார் செய்து தருகிறார், அதுகும் மிகவும் குறைந்த விலையில். 

இது ஹோட்டலோ, உணவு கூடமோ அல்ல. இது ஒரு ஸ்ரீ வைஷ்ணவ இல்லம். 100% வீட்டிலேயே வைஷ்ணவர்களால் தயாரிக்கப்படுகிறது. 

இந்த வசதி அனைத்து வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் உண்டு.
யாத்ரீகர்கள் ஒரு நாள் முன்னரே தங்களுக்கு தேவையான உணவு மற்றும் அளவுகளை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம். 

அன்றைய காலை உணவிற்கு முன்னாள் மதியத்திற்குள்ளும், இரவு உணவிற்கு முன்னாள் இரவுக்குள்ளும் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
அது போல தங்குவதற்கு இட வசதி வேண்டுவோர் ஒரு நாள் முன்னரே தெரியப்படுத்த வேண்டுகிறோம். 

காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை/இரவு உணவு ஏற்பாடு செய்யப்படும். 

தங்குவதற்கு குளிர் சாதனம் மற்றும் கட்டில் வசதியுடம் கூடிய சௌகர்யமான அறைகள் உள்ளன. 

அணுக வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி: 

ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்,
19-9-7A , கென்னெடி நகர், திருச்சானூர் ரோடு, திருப்பதி, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் அருகில், திருப்பதி - 517501, ஆந்திர பிரதேசம். செல்: 09000677593, 09440182740

Dailyhunt

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...