Monday, October 16, 2017

மகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால் தம்பதியர் தற்கொலை: திருப்பூரில் 5 குழந்தைகளின் பெற்றோருக்கு நிகழ்ந்த சோகம்

Published : 15 Oct 2017 14:44 IST

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்
மகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால், பாண்டிச்சேரியை சேர்ந்த் 5 குழந்தைகளின் பெற்றோர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:
பாண்டிச்சேரி கதிர்கம்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜபெருமாள்(37). இவரது மனைவி அம்பிகா(32). இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். தம்பதியருக்கு 2 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 5 குழந்தைகள். தம்பதியரின் மூத்தமகள் பாண்டிச்சேரி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்தநிலையில், அங்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாண்டிச்சேரி கோரிமேடு போலீஸாரிடம் தம்பதியர் புகார் அளித்தனர். அதன்பேரில் போஸ்கோ சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட சிறுவனை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ராஜபெருமாள் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தனர். பாண்டிச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பாதிக்கப்பட்ட மகளை அழைத்துக்கொண்டு, கடந்த 13-ம் தேதி இரவு அங்கிருந்து விழுப்புரம் வந்தனர். அதன்பின் அங்கிருந்து மூவரும் ரயிலில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அதன்பின், திருப்பூருக்கு பேருந்தில் வந்தனர்.
திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் இறங்கி அதன்பின் அங்கிருந்து பழநி சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் கோயில் வழியில் 14-ம் தேதி மாலை இறங்கியுள்ளனர். அப்போது மூன்று குளிர்பான பாட்டில்களை வாங்கி குடித்துள்ளனர். தம்பதியர் இருவரும் குளிர்பானத்தில் பூச்சிமருந்து கலந்து, மகளுக்கு தெரியாமல் குடித்தனர்.
இதையடுத்து கோயில்வழியில் இருந்து திருப்பூர் மாநகருக்கு செல்லும் சாலையில் மூவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே தம்பதியர் தொடர்ச்சியாக வாந்தி எடுப்பது தெரியவந்தது. உடன் வந்த மூத்த மகள் கதறி அழுவதைக்கண்ட அப்பகுதியினர் உடனடியாக ஊரக போலீஸாருக்கும், 108 ஆம்புலன்ஸூக்கும் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற ஊரக போலீஸார் தம்பதியரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜபெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தாயும் சிச்சை பலன் இன்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
திருப்பூரில் உள்ள காப்பகத்தில் தம்பதியர் மகளை ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஊரக போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மேலும், அம்பிகாவின் தாயிடம் மற்ற 4 குழந்தைகளையும் பாரமரிக்கச் சொல்லியும், மகளுக்கு நிகழ்ந்த கொடுமையால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டதாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்ததது என்றனர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...