தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை; கொண்டாடாதவர்களுக்கு பாராட்டு கடிதம்: திருச்சி தனியார் பள்ளியின் அடாவடி!
By IANS | Published on : 23rd October 2017 05:48 PM
திருச்சி: திருச்சியில் தனியார் பள்ளி ஒன்று தங்கள் மாணவர்களில் தீபாவளி கொண்டாடியவர்களுக்கு தண்டனை அளித்தும், கொண்டாடாதவர்களுக்கு பாராட்டு கடிதம் கொடுத்தும் நடந்து கொண்ட விதம் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
திருச்சி பாலக்கரையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் தீபாவளி விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்களிடம் யார் யார் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு கையை உயர்த்தி ஆமாம் என்று பதில் கூறிய மாணவர்களுக்கு தணடனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பட்டாசு வெடித்த மாணவர்கள் பாவம் இழைத்து விட்டதாகக் கூறி, கடவுளிடம் மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கையில் மருதாணி வைத்துக் கொண்டு வந்திருந்த மாணவி ஒருவருக்கு அடி விழுந்துள்ளது. அதே சமயம் தாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை என்று கூறிய மாணவர்களுக்கு பாராட்டுக் கடிதம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தகவலைக் கேள்விப்பட்டு இன்று அப்பள்ளி முன் திரண்ட பெற்றோர்கள் பள்ளியின் வாயில் கதவை மூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தகவல் கேள்விப்பட்டு அங்கு வந்த போலீசாரிடம் கூடியிருந்த பெற்றோர்கள் மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் தாங்கள் ஒளி மற்றும் காசு மாசினை குறைக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அறிவுரைகளை பின்பற்றியதாகத் தெரிவித்தனர். பின்னர் பெற்றோர் ஒருவரின் புகாரின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பாக இன்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை மேலதிகாரிகளுக்கு அனுப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment