Friday, October 6, 2017

தப்பித் தவறியும் இவைகளை வைத்து பூஜை செய்யாதீர்கள்?
Published on : 05th October 2017 01:05 PM



பூஜை அறையில் நாம் செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

வீட்டில் பூஜை செய்யும் போது சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்? எந்த பழம் எந்த தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எந்தப் பூ கொண்டு ஸ்வாமிக்கு அர்ச்சனைச் செய்வது எனப் பல சந்தேகங்கள் ஏற்படும்.

வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் நுண்ணாம்பு இருக்கக் கூடாது.

அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். மேலும், நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும்.

வாழையில் நாட்டுப்பழம் நல்லது. குடுமி தேங்காயை சீறாக உடைத்து பிறகு குடுமியைப் பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் இருந்தால், அதனை மாற்றி வேறு தேங்காயை உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் இருக்கக் கூடாது. வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகை போடுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல் கொண்டது.

கோலமிட்டு, விக்ரகங்களைச் சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன்பின் கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளுக்கு அர்ச்சதையால் பூஜிப்பதும் தவறு. சிவபெருமானுக்கு தாழம் பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை பூ ஆகாது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உகந்தது அல்ல. வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்கள் உகந்தவை.

அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது.

சாமந்தி போன்ற மனமில்லாத மலர்கள் பூஜைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால், அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும் போது முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும். காய்ந்துபோன மற்றும் அழுகிப்போன, வாடிப்போன, பூச்சி கடித்த பூக்களைப் பயன்படுத்த தெய்வ குற்றமாகும். இவையே பூஜை அறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஆகும்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024